பதிவு செய்த நாள்
03
பிப்
2012
10:02
மார்த்தாண்டம்:கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் பங்குனி பரணி தூக்கத்திருவிழா மார்ச் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 26ம் தேதி பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தென் தமிழகத்தில் உள்ள தேவி கோயில்களில் தனிச்சிறப்பு பெற்றது. இக்கோயில் குமரி மாவட்டத்தில் அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. தமிழக - கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபாட்டு முறைகள் கேரள கலாச்சாரத்தை ஒத்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள பகுதி பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒரே வழிபாட்டு முறை கொண்ட அம்மனுக்கு இங்கு மட்டுமே இரண்டு கோயில்கள் உள்ளது மற்றுமொரு சிறப்பாகும். கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டருக்கு அப்பால் வட்டவிளையில் மூலகோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி 500 மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழா கோயிலும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி பரணியை முன்னிட்டு 10 நாட்கள் நடக்கும் தூக்க திருவிழாவிற்காக அம்மன் மூலகோயிலில் இருந்து வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். இதேப்போன்று ஆண்டுதோறும் மகரவிளக்கை முன்னிட்டு 41 நாட்கள் நடக்கும் மண்டலகால சிறப்பு பூஜைக்கும் அம்மன் எழுந்தருளுவார். இந்த பூஜை இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை வெங்கஞ்சி திருவிழா கோயிலில் நடக்கிறது. ஏனைய நாட்கள் அம்மன் மூலகோயிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தமிழகத்தில் கொல்லங்கோடு, மூவோட்டுகோணம், இட்டகவேலி உள்ளிட்ட ஒருசில கோயில்களில் மட்டுமே பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. அதுவும் கொல்லங்கோட்டில் மட்டுமே ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது.சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தைகளும் என ஒரே நேரத்தில் எட்டு பேர் ரதத்தில் கோயிலை ஒருமுறை சுற்றிவரும் போது தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டதாக கருதப்படுகிறது.குழந்தை பாக்கியம் வேண்டியும், பெற்ற குழந்தைகள் நோய் நொடியின்றி நல்லறிவு பெற்று நீண்டகாலம் வாழவும் அம்மனை வேண்டி தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆண்டைய பங்குனி பரணி தூக்க திருவிழா மார்ச் 17ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக அன்று மாலை அம்மன் திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். 19ம் தேதி தூக்க நேர்ச்சையில் பங்கேற்கும் நேர்ச்சை குழந்தைகளின் பெயர் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.தூக்க நேர்ச்சை குழந்தைகளின் வரிசைப்படுத்துதல் நிகழ்ச்சி குலுக்கல் முறையில் 20ம் தேதி நடக்கிறது. 25ம் தேதி மாலை தூக்க ரதத்தின் சோதனை ஓட்டம் எனும் வண்டியோட்டம் நிகழ்ச்சியும், 26ம் தேதி அதிகாலை தூக்க நேர்ச்சையும் நடக்கிறது. மேலும் விழா நாட்களில் சமய சொற்பொழிவு, பாலே, கதகளி, நாடகம், இன்னிசை, மெல்லிசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி தேவஸ்தான செயலாளர் சதாசிவன் நாயர் தலைமையில் தலைவர் பங்கஜாக்ஷன்தம்பி, துணைத்தலைவர் வக்கீல் சுகுமாரன்நாயர், சேர்மன் பரமசிவன்நாயர், துணைசேர்மன் குட்டன்பிள்ளை, பொருளாளர் சனல்குமாரன்தம்பி, துணைச்செயலாளர் சுகுமாரன்நாயர், எஜூகேஷனல் சொசைட்டி தலைவர் வக்கீல் ராமச்சந்திரன் நாயர், துணைத்தலைவர் அப்புக்குட்டன்நாயர், செயலாளர் மோகன்குமார் மற்றும் செயற்குழு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.