பதிவு செய்த நாள்
04
அக்
2018
01:10
திருவாப்புடையார் - திருஆப்பனூர் கோயில், வட திருவாலவாய்க் கோவில், காஞ்சனமாலைக் கோவில், தென் திருவாலவாய்க் கோவில், ஆஞ்சநேயக்கோவில், பைரவர் கோயில், செல்லத்தம்மன் கோயில், சப்தமாதர் வீரபத்திரர் கோயில், மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், இம்மையிலும் நன்மை தருவார் கோயில், கூடலழகர் கோயில், ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில், மதனகோபால சுவாமி கோயில் முனீஸ்வரர் கோயில், கோதண்ட ராமர் கோயில் முதலிய பழங்காலக் கோயில்களும் இவைகளோடு சிறப்புமிக்க முக்கியத் தெருக்கோயில்கள் சாலையோரக் கோயில்கள் தெருமுனைக்கோயில்கள் என எண்ணிலடங்கா கோயில்களும் வருடம் முழுவதும் அதனதன் வழிபாடுகளும் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளன.
மதுரை பற்றி வேறு சில செய்திகள்:
நகரா மண்டபம்: அம்மன் சன்னதிக்கு எதிரே காணப்படும் நகரா மண்டபம் இம்மண்டபம் இராணி மங்கம்மாவின் திருப்பணி என்பது அம்மண்டபத்தில் காணப்படும் இராணியின் உருவச்சிலையால் உறுதி செய்யப்படுகிறது. மேலும் ஊரில் திருக்கோயில் திருவிழா நடைபெறும்போதும் இதர சில வைபவங்களை தெரியப்படுத்தும்போதும் இம்மண்டபத்திலுள்ள நகராவை பயன்படுத்தியுள்ளார்கள். மேலும் கோயில் ஊழியர்களை அவர்கள் பணிக் காலத்தை அறிவிப்பதற்கும் சிற்சில வேலைகளை அவசர செய்திகள் தெரிவிப்பதற்கும் நகரா என்ற இம்முரசொலியை எழுப்பியுள்ளார்கள்.
எழுகடல்: எழுகடல் என்னும் தடாகம் சாளுவ அரசர்களான நரசய்யன் என்பவரால் சீர்திருத்தி அமைக்கப்பட்டது என்பது கி.பி 1516ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றினால் தெரிய வருகிறது. இத்தடாகம் தடாதகை பிராட்டியாரின் அன்னைக்காக சிவபெருமான் எழுகடயையும் இங்கு வரவழைத்ததாக ஒரு புராண வரலாறு உண்டு.
மதுரைத்திருவிழா: நாளெல்லாம் திருவிழாவாக் கொண்டாடத்தக்க வகையில் சித்திரை வீதி, ஆடி வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி ஆகியவைகள் அமைந்தன. அன்னையின் மங்கல விழா அந்தந்த மாதங்களில் அந்தந்த வீதிகளில் திக் விஜயம் நடந்து வருவதை முன்னிட்டு அவற்றின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இன்றைய தெருவீதி அமைப்புகள் நான்கு வெளி வீதிகளுக்குள் அடங்கிய மதுரைக் கோட்டையின் அமைப்பு ஆகியவை நாயக்கர் மன்னர் கால அமைப்பை ஒட்டியனவையே. கோட்டை மதிலுக்கு வெளியே அமைந்தவை. வெளிவீதிகள் கோட்டையின் நான்கு வாயில்களில் ஒன்றான மேலை வாயிலின் ஒரு பகுதியே பிற்கால சிறிய அளவில் மாநகராட்சி அலுவலகமாகத் திகழ்ந்தது. இன்றைக்கும் தெற்கு வாயில் கீழை வாயில் என்னும் பெயர்கள் வழங்கி வருகின்றன. வடக்கு வாயில் செல்லத்தம்மன் கோயில் பகுதியில் அமைந்திருக்க வேண்டும். மாரட் எனும் ஆங்கிலேயரால் கோட்டையின் அகழி தூர்க்கப்பட்டது. அப்பணியை முன்னின்று நடத்தியவர் பெருமாள் மேஸ்திரி. எனவே இவர்கள் பெயரால் நான்கு மாரட் வீதிகளும் நான்கு பெருமாள் மேஸ்திரி வீதிகளும் அமைந்திருந்தன.
குறிப்பு: மன்னர் திருமலை நாயக்கர் வழியில் இன்னும் ஆயிராமாயிரம் ஆண்டுகள் நிறைவேறினாலும் திருமலை மன்னரின் திருப்பணியின் தொடர்ச்சிதான் அத்தனையும் இருக்க முடியும்.