பண்டிகைகளில் அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டுமே. குடும்பத்திற்கு மட்டுமின்றி, உறவினர், நண்பர் வகையிலும் புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என தாராளமாக பணம் செலவாகும். இந்நாளில் பணத்திற்கு அதிபதியான குபேரலட்சுமியை வழிபட்டால் எல்லா நாளும் தீபாவளியாக இனிக்கும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியத்தை படைத்து ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ என்னும் மந்திரங்களை 108 முறை ஜெபித்து மகாலட்சுமிக்கு தீபம் காட்ட வேண்டும்.
வரப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்
மனத்தீமை என்னும் நரகாசுரன் அழிந்து, கிருஷ்ணன் என்னும் தீபம் திக்கெட்டும் பிரகாசிக்கும் தீபாவளியன்று கிருஷ்ணரை வழிபட்டால் நல்வாழ்வு உண்டாகும்.
* நற்குணங்களின் இருப்பிடமே! கருணையின் விலாசமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குலத்தின் தவக்கொழுந்தே! மேகம் போல நீலவண்ணனே! கண்ணனே! மதுராநகர வாசியே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே! உன்னை வணங்குகிறேன்.
* என் மனத் தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்தகோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால் கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! உன்னை வழிபடுகிறேன்.
* கதம்ப மலரைக் காதில் குண்டலமாகத் தரித்தவனே! மிக அழகான கன்னங்களைக் கொண்டவனே! கோபிகைப் பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பைப் பொழிந்தவனே! வழிபடும் அடியவர்க்கு சுகம் தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்.
* பூபாரத்தைப் போக்கியவனே! பிறப்பு, இறப்பு என்னும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெய்யை விரும்பித் திருடுபவனே! சாதுக்கள் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! கிருஷ்ணனே! உன்னைச் சரணடைகிறேன்.
* இடைக்குலத்தின் திலகமாக திகழ்பவனே! ஆயர்குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தைத் துாண்டுபவனே! சூரியன் போல பிரகாசிப்பவனே! வேணுகானம் இசைப்பதில் வல்லவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரமருள்பவனே! கிருஷ்ணனே! உன்னைப்போற்றி மகிழ்கிறேன்.
* ஆயர்பாடிக்கு அலங்காரமே! பாவங்களை போக்குபவனே! பக்தர்களின் மனதை மகிழ்விப்பவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில்தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! கோபியரிடம் விளையாடியவனே! கிருஷ்ணனே! உன்னை துதிக்கிறேன். உன்னருளால் உலகம் செழிப்புடன் வாழட்டும்.