பதிவு செய்த நாள்
13
நவ
2018
03:11
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ஹிந்து கடவுளான ராமர் பிறந்த இடமாக கருதப் படும், ராமஜென்மபூமியில், கோவில் கட்டும் பணிகள், 50 சதவீதம் நிறைவடைந்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமஜென்மபூமி குறித்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும், கோவில் பணிகள் வேகமெடுக்கும் என, கட்டுமானப் பணிகளை கவனிக்கும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் .உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும் ராமர், இங்குள்ள அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ராமர் பிறந்த இடத்தை, ராமஜென்மபூமி என பெயரிட்டு அழைக்கும் ஹிந்துக்கள், அந்த இடத்தை புனிதமானதாக கருதுகின்றனர். ராமஜென்ம பூமியில், மிக பிரமாண்ட ராமர் கோவில் கட்ட, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற, ஹிந்துத்வா அமைப்புகள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன.
ராமஜென்பூமி என அழைக்கப்படும் இடத்தில், முன்னொரு காலத்தில், ராமர் கோவில் இருந்ததாகவும், முகலாய மன்னர் பாபர், அந்த விலை இடித்துவிட்டு, மசூதி கட்டியதாகவும் ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, 1992 டிச., 6ல், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், ஊர்வலமாக சென்ற ஹிந்துத்வா அமைப்பினர், பாபர் மசூதியை இடித்தனர். இந்த சம்பவத்தால், நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. பாபர் மசூதி இருந்த இடம் தங்களுக்கே சொந்தம் என, முஸ்லிம் அமைப்பினரும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என, ஹிந்துத்வா அமைப்பினரும் கூறி வருகின்றனர். இது குறித்த வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்
விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., உள்ளிட்ட ஹிந்துத்வா அமைப்புகள், ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளன. இந்நிலையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வெளியானால், கோவில் கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும், கோவில் கட்டும் பணியை நிர்வகிக்கும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ராமர் கோவில்கட்டும் பணிகளை நிர்வகிக்கும், அன்னு பாய் சோம்புரா கூறியதா வது: அயோத்தியில், ராமர் பிறந்த இடமான, ராமஜென்மபூமியில், அவருக்கான கோவில் கட்டப்படுவதை, யாராலும் தடுக்க முடியாது. 1990 முதல் இதற்கான பணிகள் துவங்கி விட் டன. கடந்த, 1992ல் ஏற்பட்ட கலவரத்திற்கு பின், கோவில் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால், அதன் பின், இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரசேவகர்கள், பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம், கோவில் கட்ட தேவையான கற்கள், மரங்கள், மேலும் சில அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்களிலும் ராமரின் பெயர் எழுதப்பட்டு, தொடர்ந்து, ராமர், சீதையின் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகிறது. கற்களையும், மரங்களையும் செதுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. தற்போதைய நிலையில், கோவில் கட்ட தேவையான ஆயத்தப் பணிகளில், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு, நிச்சயம் எங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு வந்ததும், கோவில் கட்டும் பணி வேக மெடுக்கும். தயார் நிலையில் உள்ள கற்கள், மர சாமான்களை பொருத்தும் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம், மிக விரைவில், கோவில் கட்டும் பணி, 100 சதவீதம் நிறைவடை யும். கோவிலுக்கு கிடைத்த நன்கொடையை வைத்து, 50 சதவீத பணிகளை முடித்துள்ளோம். நிதி பற்றாக்குறையால், கோவில் பணிகளில் தற்காலிக தொய்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு? : அயோத்தியில் சர்ச்சைக்குரியஇடத்தை உரிமை கோரி வழக்கு தொடர்ந்த, முஸ்லிம் அமைப்பை சேர்ந்த, ஹாஜி மெஹபூப் மற்றும் முகமது உமர் ஆகியோர், இந்த பிரச்னைக்கு, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண சம்மதம் தெரிவித் துள்ளனர்.அதே போல், அயோத்தியில் உள்ள கேவத் மசூதியின் இமாம் மற்றும் தேஜி பஜார் மசூதியின் இமாம் ஆகியோரும் சமரசத்திற்கு சம்மதம்
தெரிவித்துள்ளனர். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் மாதாந்திர கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில், ஆணையத்தின் தலைவர், கயோருல் ஹசன் ரிஸ்வி, செய்தியாளர் களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படுவது தான், நியாயம். 100 கோடி ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதே சிறந்தது. பல்வேறு முஸ்லிம் அமைப்பினர், இது தொடர்பாக, ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்களும், இதே கருத்தை முன் வைத்துள்ளனர். அயோத்தியில் வசிக்கும் முஸ்லிம்கள் சண்டை சர்ச்சரவின்றி, அமைதியாகவும், நிம்மதி யாகவும் வாழ, அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். இது தொடர்பாக, நாளை நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ராமர் விரும்ப வேண்டும்! :
ராமர் விரும்பும் போது, அயோத்தியில் அவருக்கான கோவில் கட்டப்படும். ராமர் கோவில் விவகாரத்தில், பா.ஜ.,வின் நிலை குறித்து, ஏற்கனவே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆன்மிக நம்பிக்கையில் தான், நம் நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. தினேஷ் சர்மா, உ.பி., மாநில துணை முதல்வர், பா.ஜ.,
சுப்ரீம் கோர்ட் மறுப்பு :அகில பாரத ஹிந்து மஹாசபா சார்பில், வழக்கறிஞர் பருன் குமார் சின்ஹா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ராமஜென்பூமி குறித்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கும் படி கோரினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி, கே.எஸ்.கவுல் அடங்கிய அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்தது. ஏற்கனவே, நீதிமன்றம் கூறியபடி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த வழக்கு விசாரணை நடக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.