பதிவு செய்த நாள்
14
நவ
2018
11:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹரம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திபரவசமடைந்தனர்.
கோவையின் முக்கிய ஸ்தலமாகவும், முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாகவும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும், தைப்பூசத்திருவிழா மற்றும் கந்தசஷ்டி திருவிழா ஆகிய இரண்டு முக்கிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா, காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் கடந்த, 8ம் தேதி துவங்கியது. ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவின் முதல் நாளில் இருந்து காலை, மாலை இருவேளையும் யாகசாலை பூஜை நடைபெற்றது. ஆறாம் நாளான நேற்று கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடந்தது. இதில், குதிரை வாகனத்தில் வந்த வீரபாகு, தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் துாது சென்றார். அதன்பின், சுப்பிரமணி சுவாமி, சூரசம்ஹாரத்திற்காக பச்சை நாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையறிந்த சூரபத்மனன் மரமாக உருமாறி நின்றார். சுப்பிரமணிய சுவாமி வீரநடனத்துடன் சம்ஹாரத்திற்கு எழுந்தருளி, சூரபத்மன், பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரனை வதம் செய்தார். பின், சுப்பிரமணிய சுவாமிக்கு வெற்றி வாகை சூடும் நிகழ்ச்சியும், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சாந்தாபிேஷகம், தீபாராதனைகள் செய்யப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அரோகரா கோஷம் எழுப்பினர். கந்தசஷ்டி விழாவின் ஏழாம் நாளான இன்று, காலை 8:30 மணிக்கு யாகசாலை கலசங்கள், மூலவருக்கு அபிேஷகமும், காலை 9:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணமும், திருவீதியுலாவும் நடக்கிறது.