குடியிருக்க வீடு அவசியம். ஆனால், அதைக் கட்டுவதற்குள், ஆயிரம் பிரச்னைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. தடைகளையெல்லாம் தாண்டி,
வீடு கட்டி முடிக்க சம்பந்தர் பாடிய இந்தப் பதிகம் உங்களுக்கு வழிகாட்டும். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை மனதில் நினைத்து இதைப் பாடுங்கள். மளமளவென பணி முடியும்.
நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை உமை ஒருபாகம் உடையானை சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே. கைம்மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக்கழை பாய்வான் செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி வெம்முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா நீ பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே. மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல் செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி சந்தம் மலர்கள் சடைமேல் உடையார் விடைஊரும் எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே. துறைமல்கு சாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச் சிறைமல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக் கறைமல்கு கண்டன் கனல்எரி ஆடும் கடவுள்ளம் பிறைமல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே. கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும் சிலைவரையாகச் செற்றன ரேனும் சிராப்பள்ளித் தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள் நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே. வெய்ய தண்சாரல் விரிநிற வேங்கைத் தண்போது செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார் தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில் ஐயமும் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே. வேயுயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும் சேயுயர் கோயில் சிராப்பள்ளி மேவிய செல்வனார் பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே. மலைமல்கு தோளன் வலிகெட ஊன்றி மலரோன்தன் தலைகலனாகப் பலிதீர்ந்து உண்பர் பழி ஓரார் சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால் சிலஅல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே. அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக் கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த சிராப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும் இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே. நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சி நாள் காலை ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள் உரைக்கும் சொல் பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார் சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே. தேன்நயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த கானல் சங்கேறும் கழுமல ஊரில் கவுணியன் ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார் வான சம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே.