பதிவு செய்த நாள்
24
நவ
2018
04:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று (நவம்., 23ல்) நடந்த கிருத்திகை விழா மற்றும் மகா தீபத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன்
குவிந்தனர்.
திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று (நவம்., 23ல்), கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், கோவில் நுழைவாயில் முன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது.அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல்
விளக்கில், 300 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது, மலைக் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா, அரோகரா... என, பக்தி முழக்கமிட்டனர்.இந்த தீபத்தை பார்த்த பின், திருத்தணி நகரம் முழுவதும் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன், உற்சவ பெருமான் மாட வீதியில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள், காவடிகளுடன் மலைக்கோவிலில் குவிந்து, பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.நேற்று (நவம்., 23ல்) மழை இல்லாததால், பக்தர்கள் சிரமப்படாமல், சுவாமியை தரிசித்தனர்.