மனைவியை புறக்கணித்து விட்டு வேறொருத்தியை திருமணம் செய்ய நினைத்தான் இளைஞன் ஒருவன். காரணமின்றி அவளைத் துன்புறுத்தியதால் எதிர்க்கத் தொடங்கினாள். ஆத்திரமடைந்த அவன் கொலை செய்யத் துணிந்தான். வழக்கில் சிக்காமல் இருக்க போலி மந்திரவாதியைச் சந்தித்து ஆலோசித்தான். அவன் ஒரு மருந்தைக் கொடுத்து, “இதை குடித்தால் உன் மனைவிக்கு பைத்தியம் பிடிக்கும். அந்நிலையில் வாழ முடியாதெனக் கூறி விவாகரத்து பெற்றுக் கொள்” எனச் சொல்லி பெருந்தொகை பெற்றான். நல்லவன் போல் நடித்த இளைஞன் மனைவியைத் துன்புறுத்தியதற்கு மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். “இந்த மருந்தைக் குடி; இவ்வளவு நாளும் உன்னை அடித்ததால் ஏற்பட்ட ரணம் தீரும்” என்றான். ஆனால், அவள் நம்ப மறுத்தாள். குடிக்க தயங்கினாள். மீண்டும் ஆரம்பித்தது சித்திரவதை. வலுக்கட்டயமாக வாயில் மருந்தை ஊற்றினான். கண்களை மூடி கடவுளைப் பிரார்த்தித்தாள். மருந்தால் தீங்கு நேரவில்லை. பணம் செலவழித்தும் பயன் கிடைக்காததால் மந்திரவாதியிடம் சண்டையிட்டான். தகராறு முற்றியதில் மந்திரவாதியின் தலையை பிடித்து சுவரில் மோதவே, அவன் இறந்தான். அதற்குரிய தண்டனையாக சிறையில் தள்ளப்பட்டான் இளைஞன். தீவினை செய்தவர்கள் பாவத்திற்குரிய தண்டனையை பெற்றனர். கொடுமைக்காரனிடமிருந்து விடுதலை பெற்ற அப்பெண் தேவாலயம் ஒன்றில் பணிபுரிந்து நிம்மதியடைந்தாள்.