வைகுண்ட ஏகாதசியான இன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் உண்டாகும்.* ஸ்ரீரங்கத்தில் சயன கோலத்தில் இருப்பவரே! பாம்பணையில் துயில்பவரே! காண்பவர் மயங்கும் பேரழகு மிக்கவரே! நாராயண மூர்த்தியே! அச்சுதனே! தாமரைக் கண்களைக் கொண்டவரே! மூவுலகையும் காப்பவரே! லட்சுமி தங்கும் திருமார்பை உடையவரே! உன் பாதம் பணிந்தோம். எங்களுக்கு செல்வ வளம் தந்தருள்வீராக.* பிரம்மாவாலும், தேவர்களாலும் வணங்கப்படும் தாமரைப் பாதங்களைக் கொண்டவரே! பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவரே! பிரகாசம் மிக்க சக்ராயுதத்தை தாங்கியவரே! கருணைக்கடலே! புண்ணிய மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! எங்களுக்கு ஆரோக்கியம் மிக்க நல்வாழ்வு அளிக்க வேண்டும்.*பத்மநாபரே! கருணைப் பார்வையால் வேண்டும் வரம் தருபவரே! முகுந்தனே! முராரி கிருஷ்ணா! கோபாலா! கோவிந்தா! வாசுதேவா! மங்களகரமான சரீரத்தைக் கொண்டவரே! திருமகளின் மனம் கவர்ந்தவரே! ஆதிசேஷன் மீது துயில்பவரே! எங்கள் குடும்ப நிம்மதி நிலைக்க அருள்புரிய வேண்டும்.* பக்தரைக் காப்பவரே! உயிர்களை சம்சாரக் கடலில் இருந்து காப்பவரே! ஆதிமூலமே என அழைத்த யானையின் இடர் தீர்த்தவரே! சாதுக்களின் உள்ளத்தில் வாழ்பவரே! பட்டு பீதாம்பரதாரியே! காவிரி மத்தியில் துயிலும் ரங்கராஜரே! உம் அருட்பார்வையை எங்கள் மீது காட்டியருள வேண்டும்.* இந்திர நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவரே! ஏழு மதில்கள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்தின் காவலரே! மதுசூதனரே! கல்யாண குணங்கள் பெற்றவரே! உயிர்கள் எல்லாம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.