பதிவு செய்த நாள்
06
பிப்
2019
03:02
காஞ்சிபுரம்:ராகு, கேது பெயர்ச்சியை யொட்டி, பரிகார ஸ்தலமான, காஞ்சிபுரம் மாகாளேஸ் வரர் கோவிலில், வரும், 13ல், பரிகார லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், மேற்கு ராஜகோபுரத்தின் பின்புறம், பழமையான மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராகு, கேது நவக்கிரக பரிகார ஸ்தலமான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது.இங்கு
எழுந்தருளியுள்ள மாகாளேஸ்வரரை, காளஹஸ்தியில் வசித்து வந்த, மாகாளன் என்ற பாம்பரசன், சிவபெருமான் இட்ட சாபத்தை போக்கிக்கொள்ள, தரிசித்து பாப விமோசனம் பெற்றதாக, காஞ்சி புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில், ராகு, கேது, சிவபெருமானுடன் உள்ள திருக்கோல காட்சி அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒன்பது நவக்கிரகங்களுக்கும், தனித்தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தம்பதி சமேதராய், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும், இக்கோவிலில், ராகு, கேது பகவானுக்கு, தனித்தனி சன்னிதி அமைந்துள்ளதால், ராகு, கேது பெயர்ச்சியின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிரகதோஷ பரிகார நிவர்த்திக் காக வந்து, வழிபட்டு செல்கின்றனர்.
வரும், 13, மதியம், 2:02 மணிக்கு, ராகு பகவான், கடக ராசியில் இருந்து, மிதுனத்திற்கும், கேது பகவான், மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றனர்.கிரக தோஷ நிவர்த்திக்காக, அன்று காலை முதல், ஹோம பரிகார லட்சார்ச்சனை நடைபெறுகிறது.