இறைவனே இல்லை என்கிறான் நாத்திகவாதி. அவனுக்கு கஷ்டம் வந்தால் “இறைவா! நீ இல்லை என்று கேலி பேசியதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன்; என்னை மன்னித்து விடு” என்பான். கருணை மிக்க இறைவனும் மன்னிக்க, கஷ்டம் தீரும். பின்னர் முன் போலவே நாத்திக வாதம் பேச ஆரம்பித்தால் நாளடைவில் முன்பை விட பெரிய கஷ்டம் வரும். மீண்டும் மன்னிப்பு கேட்டால் இறைவன் அவனை மன்னிக்க மாட்டான். சொல்லாமல் சினிமாவுக்கு போனாள் என்பதற்காக மனைவியை ஆத்திரத்தில் அடித்த கணவன் மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிக்க வாய்ப்புண்டு. ஆனால் குடிக்க பணமில்லை என்பதற்காக அவளது நகையை பறித்தால் மன்னிப்பானா என்றால் மாட்டான். இறைவன் மீது பயமில்லாதவர்களே அவனை கேலி செய்கிறார்கள் என்கிறது குர்ஆன். சிலர் மனம் திருந்துவது போல் நடித்து “இன்று ஒருநாள் மட்டும் மன்னித்து விடு. நாளை முதல் தவறு செய்ய மாட்டேன்” என சொல்லி விட்டு மீண்டும் தவறைச் செய்வார்கள். இவர்கள் இறப்புக்கு பின் இறைவன் முன்னிலையில் தண்டனை பெறுவார்கள். வட்டி வாங்கி பிறரை இம்சை செய்து விட்டு, இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறவர்கள் இருக்கிறார்களே! அவர்களின் வயிற்றில் பாம்புகள் குவியும்.