வடமதுரை:திண்டுக்கல் நகரில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 26 வரை வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் சுவாமி பல்வேறு பகுதிகளில் வீதியுலா வருகிறார்.
வடமதுரை பெருமாள் பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகரில் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 99-வது ஆண்டாக நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) துவங்கிய விழாவில் வடமதுரையில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட சுவாமி முள்ளிப்பாடியில் தங்கி, நேற்று (மார்ச்., 21ல்)காலையில் சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்தார்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்ற சுவாமிக்கு நாகல்நகர் விஸ்வ பிராமண வாலிப சங்கத்தினரால் வரவேற்பளிக்கப்பட்டது.மார்ச் 26 வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் குதிரை, கருட, புஷ்ப பல்லக்கு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 27 ல் வடமதுரை கோயில் சன்னதிக்கு பெருமாள் சுவாமி திரும்புகிறார். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் நாராயணி, தக்கார் மகேஸ்வரி செய்து வருகின்றனர்.