சிலருக்கு வீடு கட்ட முடியவில்லையே, பெரிய பங்களாவில் குடியிருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே வீடு கட்டியிருப்பவர்கள் வாங்கிய 15 லட்சம் ரூபாய் கடனுக்கு, வட்டியுடன் 25 லட்சம் கட்ட வேண்டியிருக்கிறதே என தங்கள் முன்னால் நீண்டு கிடக்கும் தவணை ஆண்டுகளை நினைத்து வேதனைப்படுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிற வீட்டை விரிவுபடுத்தலாமே என்றெண்ணி கடனை வாங்கி கஷ்டப்படுகிறார்கள். வாடகை வீட்டில் இருந்தால் அந்தந்த மாதம் வாடகையுடன் பிரச்னை முடிந்தது என சந்தோஷப்படுங்கள். ஏனெனில் இந்த உலகமே நாம் தங்கியிருக்கும் வாடகை வீடு தான்!
போதகரான சாமுவேல் பவுல் மரணப்படுக்கையில் கிடந்த போது அருகில் உள்ளவரிடம், ”சகோதரரே! இந்த வீட்டைப் பாருங்கள். இதன் கூரையையும் பாருங்கள்! எவ்வளவு கேவலமாக இருக்கிறது! இதற்காக வருத்தப்படவில்லை. ஏனெனில், நான் செல்லவிருக்கும் பரலோகத்திற்கு இந்த வீடு ஈடாகாது. அலங்காரமான மாளிகையான விண்ணுலக வீட்டிற்கு நான் கிளம்புகிறேன். அது ஆண்டவரால் நிரந்தரமாக தரப்படும் இலவசவீடு. ஆலயமணி அடிக்கிறது. இதோ! ஆண்டவரைக் காண நான் புறப்படுகிறேன்” என்று சொல்லி கண்களை மூடினார். இந்த உண்மை புரியாமல் நம்முடைய உடைமைகள் மீது அளவற்ற ஈடுபாடும், குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான அன்பும் வைத்து மீள முடியாமல் சிரமப்படுகிறோம். இதுபற்றி பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?
* உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள். * வாழ்க்கைப் பயணத்தின் கடைசி இலக்கு மோட்சம். * மோட்சப் பிரயாணிகளான நம்முடைய வீடு பரலோகத்தில் இருக்கிறது. * நித்ய ராஜ்யத்தை நோக்கி நாம் விரைந்து செல்வோமாக. இனியாவது நிரந்தரமான பரலோக வீட்டில் இடம் பெற பிரார்த்திப்போம்.