பதிவு செய்த நாள்
26
ஏப்
2019
12:04
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று (ஏப்., 25ல்), விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது.
வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான இங்கு, ஆண்டு தோறும், ஆதிகேசவர் உற்சவ விழா, 10 நாட்களும், ராமானுஜர் உற்சவ விழா, 10 நாட்களும் தனித்தனியாக நடைபெறும். இந்தாண்டு, ஆதிகேசவர் உற்சவ விழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின், முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, நேற்று (ஏப்., 25ல்) காலை, 8:00 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுந்தனர்.
தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கையாழ்வார் சாலை வழியாக வந்த தேர், மீண்டும் நிலையத்தை சென்றடைந்தது.பக்தர்கள் வசதிக்காக, சாலையில், வாகனங்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டது.இரும்பு சக்கரத்தால் எளிமைஆதிகேசவப் பெருமாள் கோவில் தேரின் மரச்சக்கரங்கள் மாற்றப்பட்டு, இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரோட்டம், முதல் முறையாக நேற்று நடந்தது. இரும்பு சக்கரத்தால், தேர் விரைவாக நகர்ந்தது. மேலும், சாலை திருப்பங்களில், தேரை திருப்புவதற்கு எளிதாக இருந்தது.பிளாஸ்டிக் அதிகம்தேர் திருவிழாவில் பல இடங்களில் அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.
இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன. கோவில் நிர்வாகத்தினர், பேரூராட்சி நிர்வாகத்தினர், தேர் திருவிழா அன்னதானத்தின் போது பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.
ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கவில்லைஆண்டு தோறும் உற்சவ விழாவின் போது வரும் பக்தர்கள் வசதிக்காக, அனைத்து அரசு துறையினர் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படும். இதில், பக்தர்களுக்கு, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு, தங்கும் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைத்து கொடுப்பது குறித்து விவாதிக்கப் படும்.இந்தாண்டு, லோக்சாப தேர்தல் நடந்ததால், கோவில் நிர்வாகத்தினர் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தவில்லை. இதனால், பக்தர்களுக்கான போதிய வசதிகள் ஏற்படுத்தவில்லை.
வரும், 28ம் தேதி ஆதிகேசவர் உற்சவ விழா முடியும். அதன் பின், ஏப்., 30ம் தேதி ராமானுஜரின், 1,002ம் ஆண்டு உற்சவ விழா துவங்கும்.இந்த விழாவிற்கு, ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, கோவில் நிர்வாகத்தினர் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.