திருச்சீரலைவாய், ஜயந்திபுரம் என்றெல்லாம் புராணங்கள் போற்றும் தலம் திருச்செந்தூர். இங்கு செல்லும் பக்தர்கள் திருச்செந்தில் ஆண்டவனை வழிபடுவதுடன், கடற்கரையில் இருக்கும் வள்ளிக் குகையையும் அவசியம் தரிசிக்க வேண்டும். கடற்கரையில் சந்தன நிறத்தில் காட்சி தரும் சந்தன மலை குகைக்குள் அருள்பொழிகிறாள் வள்ளிக்குறத்தி. தேவியை மணக்க விரும்பிய முருகப்பெருமான், பிள்ளையாரின் உதவியை நாடிய கதை நமக்குத் தெரியும். அதன்பொருட்டு யானை உருவத்துடன் வந்த பிள்ளையாரைக் கண்டு பயந்த குறமகள், இந்த குகைக்குள் வந்து ஒளிந்துகொண்டதாகச் சொல்கிறது புராணம். குகைக்குள் வெகுசிரத்தையுடனும் பயபக்தியுடனும் நுழைந்து சென்று வள்ளிதேவியை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இங்கு வந்து இந்த தேவியை வழிபட, தாலிவரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோன்று இலங்கை கதிர்காமத்திலும் வள்ளிக் குகை ஒன்று உண்டு.