வேதங்களை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்துள்ளனர். ரிக் என்றால் துதித்தல். முதல் வேதமான ரிக்வேதம் இந்திரன், வருணன் ஆகிய தேவர்களைத் துதித்துப் போற்றுகிறது. யஜ் என்றால் வழிபடுதல் . வேள்வி செய்து வழிபடும் முறையை யஜுர் வேதம் குறிப்பிடுகிறது. ஸாம் என்றால் சந்தோஷப்படுத்துதல் அல்லது சமாதானப்படுத்துதல். இனிமையோடு பாடலாகப் படிக்கும் விதத்தில் இந்த வேதம் அமைந்துள்ளது. ரிக்வேதத்தில் உள்ள பெரும்பாலான துதிகள் சாமவேதத்தில் கானமாக (பாடல்) அமைந்துள்ளன. பிற்காலத்தில் சப்தஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான சங்கீதத்திற்கு மூலமாகத் திகழ்வது சாமகானம் தான். இந்த வேதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பலகுறிப்புகள் உள்ளன. பகவத்கீதையில் கிருஷ்ணர், வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன், என்கிறார். லலிதா சகஸ்ர நாமம் அம்பிகையை சாமகானப் பிரியா என்று போற்றுகிறது. சியாமா சாஸ்திரிகள் மதுரை மீனாட்சியம்மனை சாமகான வினோதினி என்று சிறப்பிக்கிறார். சிவனுக்குரிய அஷ்டோத்திரம், சாமகானப் பிரியாய நம: என்று குறிப்பிடுகிறது. நான்காவது வேதம் அதர்வனமாகும். அதர்வன் என்பதற்கு அக்னியையும், சோமனையும் வழிபடும் மதகுரு என்று பொருள். அதர்வன மகரிஷி மூலம் இவ்வுலகிற்கு வந்த வேதம் என்பதால் இப்பெயர். ஆபத்து மற்றும் எதிரிகளிடம் இருந்து காக்கும் மந்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.