பதிவு செய்த நாள்
21
மார்
2012
11:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வர். நடப்பாண்டு பெரிய மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விதவிதமான பூக்களை கொண்டு வந்து, அம்மனுக்கு படைத்தனர். வரும், 24ம் தேதி இரவு 8.30க்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகம், இரவு 10.30க்கு கம்பம் நடுதல் நடக்கிறது. 29ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றம், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 5.30க்கு குண்டம், 9 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா, 4ம் தேதி காலை 9.30க்கு பொங்கல் வைத்தல், மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் எடுத்தல், மஞ்சள் நீர் விழா நடக்கிறது. 8ம் தேதி காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையர் தனபாலன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் செய்து வருகின்றனர்.