பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
12:07
உளுந்தூர்பேட்டை: மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ பூரணா- புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்ப சுவாமி, ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவர் சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ பூரணா- புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்ப சுவாமி, ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவர் சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி 19ம் தேதி காலை 10 மணியளவில் அனுக்ஞை தேவதா பிரார்த்தனையும், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், ஸ்ரீ கணபதி, லட்சுமி, நவகிரக பூஜை, ஹோமம் கோபூஜை நடந்தது. மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், யாக சாலை பிரவேசம், மண்டல பூஜை, முதல்கால யாக பூஜையும் நடந்தது.
20ம் தேதி காலை 8 மணியளவில் வேத பாராயணம், திருமுறை பாராயணமும், இரண்டாம் கால யாக பூஜையும், புதிய பிம்பங்களுக்கு கண் திறத்தல், புதிய மூர்த்திகள் பிரதிஷ்டை, தம்பதி சங்கல்பம், மதியம் 12.30 மணியளவில் பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தத்துவார்ச்சனை, தம்பதி பூஜை, வடுக பூஜை, கோ பூஜை, தீபாராதனை வழிபாடு நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் நான்காம் கால யாக பூஜையும், சங்கல்பம், பூர்ணாஹுதி தீபாராதனை, காலை 8.30 மணியளவில் கடம் புறப்பாடும், 8.45 மணியளவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9.30 மணியளவில் பரிவார தெய்வங்களுக்கும் , ஸ்ரீமுனீஸ்வர சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும், 10 மணியளவில் பூரணா புஷ்கலாம்பிகா சமேத ஐயனார் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் குமரகுரு எம்எல்ஏ, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.