ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டார பூ கமிஷன் கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிமாத முப்பழ பூஜை, அன்னதானம் நடந்தது.
நேற்று காலை திரோபதி அம்மன் கோயிலில் இருந்து தீர்த்த குடம், பால்குடம், முளைப்பாரி, 31 அக்னிசட்டி ஊர்வலம் சுற்றி வந்தது. ஊர்வலத்தை முன்னிட்டு கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 20 அடி உயர சிவன் எழுந்து சூலாயுதத்தை கொண்டு அசுரனை வதம் செய்வதும், பார்வதி மேலெழும்பி வந்து பார்வையிடுவது போல இசையுடன் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்ததை பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர். பழைய பஸ் ஸ்டாண்டு காந்திசிலை, அம்பலப்புளி பஜார், ஜவஹர் மைதானம் வழியே ஊர்வலம் மாரியம்மன் கோயிலை அடைந்தது. மற்றொரு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பூ வியாபாரிகள், கமிஷன் கடை உரிமையாளர்கள் செய்திருந்தனர்.