பதிவு செய்த நாள்
03
ஆக
2019
02:08
மேற்கு மாம்பலம்:கோதண்டராமர் கோவில் குளத்தை சீரமைத்து, தண்ணீர் தேங்க வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேற்கு மாம்பலத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகே கோவில் குளம் உள்ளது.இந்த குளம் முறையான பராமரிப்பின்றியும், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமலும் உள்ளது. இதனால், புதர்மண்டி காட்சியளிக்கிறது. குளத்தின் நீர்வரத்து கால்வாயும், முற்றிலும் மறைந்து விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் தேங்கி நின்ற குளம், தற்போது, தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.அத்துடன் குளத்தை சுற்றி உள்ள சுற்றுச்சுவர், பல இடங்களில் சரிந்தும், குளத்தின் கதவு உடைந்தும் உள்ளதால், சமூக விரோதிகள் குளத்தை தங்கள் புகலிடமாக மாற்றி உள்ளனர்.குளத்தை சுற்றி குப்பை கொட்டப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், குளத்தை சீர்செய்து, மழைநீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக் கை எழுந்துள்ளது.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.சுந்தர் ராஜன், 82, என்பவர் கூறுகையில், ”எங்கள் பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை, குளத்தில் இணைக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தோம்.எந்த நடவடிக்கையும் இல்லை. குளத்தில் தண்ணீர் தேங்கினால், சுற்றுவட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயரும்,” என்றார்.
இது குறித்து, கோதண்டராமர் கோவில் அதிகாரிகள் கூறுகையில், ’சில தன்னார்வலர் அமைப் புகள், வரும் ஞாயிறு குளத்தை சுத்தம் செய்ய உள்ளனர். இந்த பணிகள், இரண்டு வாரங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. விரைவில் குளத்தை சீரமைத்து விடுவோம்’ என்றனர்.