மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை இருக்கிறது. இதை அடைய பலவிதமாக முயற்சி எடுக்கிறான். எவ்வளவு பணம் இருந்தாலும் இன்னும் வேண்டும் என்ற ஆசை முளைக்கிறது. இதற்கு முடிவு எப்போது? “மனிதனுக்கு அதிகமாக பணம் கிடைத்தாலும் திருப்தியடைவதில்லை. இன்னும் கிடைக்காதா என ஏங்குகிறான். உயிர் போன பின் மண்ணறையில் (அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி) மண்ணைத் தவிர வேறு எந்த பொருளாலும் நிரப்ப முடியாது. பணத்தாசையால் கஞ்சத்தனம், குரூர சிந்தனை உண்டாகும். கேடு தரும் தீய வழிகளில் மனம் செல்லும். பாவங்களை எல்லாம் செய்ய துாண்டுவது பேராசையே. படாடோபத்துடன் செல்வந்தராக வாழ வேண்டும் என பேராசை கொள்பவன் நேர்மையின் பாதையில் இருந்து விலகுகிறான்” என்கிறார் நாயகம்.