பதிவு செய்த நாள்
03
அக்
2019
03:10
கடலுார்: சிதம்பரம் நடராஜர் கோவிலை, அரசுடைமையாக்க வேண்டுமென, மனு அளிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், திருவிடைமருதுார், செல்லப் பன்பேட்டையைச் சேர்ந்த மன்னர்மன்னன் அளித்துள்ள மனு: சிதம்பரம், நடராஜர் கோவில் சோழ மன்னர்களால் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இக்கோவிலில் வெளிநாட்டினருக்கும், தொழிலதிபர்களுக்கும் தீட்சிதர்கள் சிறப்பு சலுகை வழங்கி கோவிலின் மாண்பை கெடுத்து பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும், சோழ வம்ச குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர்.எனவே, இதற்கு காரணமான காரிய கமிட்டி தீட்சிதர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிச்சாவரம் சோழ மன்னர் வாரிசுகளான தங்களின் குடும்பத்தை நிரந்தர நிர்வாக அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.கோவிலை அரசுடைமையாக்க வேண்டும். கோவிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்கக் கோரி குழு அமைத்து போராட்டம் நடத்தப்படும்.
பிச்சாவரம் பகுதியில் சோழர்குல மன்னர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் சோழர்குல மன்னர்கள் வரலாற்று ஓவிய கண்காட்சியும், சோழர் குல வரலாற்று புத்தகங்கள், ஆவணங்கள், கல் வெட்டுகளை கண்டறிந்து கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில், கூறப்பட்டுள்ளது.