கரூர்: தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கரூர் அருகே தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இதில், ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த மாதம், 30ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும், பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா நடந்தது. கடந்த, 3ல், வெள்ளி கருடசேவை நடந்தது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, வெங்கடரமண சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.