பதிவு செய்த நாள்
08
அக்
2019
01:10
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் நடந்த துர்கா பூஜையில், வட மாநிலத்தவர், 2,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோலாகலமாக கொண்டாடினர். நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பண்டிகைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.
நவராத்திரி விழாவின், எட்டாவது நாளான துர்காஷ்டமியை ஒட்டி, நாடு முழுதும், நேற்று முன்தினம், கோவில்களில் துர்கா பூஜை நடந்தது. பாரதிய சேவா சங்கம் சார்பில், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், துர்கா பூஜை நடந்தது. விநாயகர், துர்கா, சிவன் சிலைகளை வைத்து, சிறப்பு ஆராதனை, பஜனைகள் நடந்தன. இதில், வட சென்னையில் வாழ்ந்து வரும், மேற்கு வங்கம், பீஹார், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், அசாம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 2,000த்திற்கும் மேற்பட்டோர், இரவு முழுவதும் நடந்த துர்கா பூஜையில் பங்கேற்றனர். துர்கா பூஜை, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டாலும், மேற்கு வங்கத்தில் மிகப்பெரும் விழாவாகும். ஒடிசா, அசாம், பீஹாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.