பதிவு செய்த நாள்
08
அக்
2019
12:10
நாமக்கல் : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், சமணர்கள் உறங்குவதற்காக செதுக்கப்பட்ட கற்படுக்கை, நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே அமைந்துள்ளது. அந்த படுக்கை, இன்றும் வழவழப்பு மாறாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே, சென்னால்கல் புதுாரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதன் கீழ்புறம், 2,000 ஆண்டுகளுக்கு முன், தமிழ் சமணர்கள் உறங்குவதற்காக பாறைகளை அடுக்கடுக்காக செதுக்கி, கற்படுக்கை அமைத்துஉள்ளனர். பாறையில் செதுக்கப்பட்டுள்ள படுக்கை, சமண முனிவர்கள், இங்கு நீண்ட காலம் தங்கி தவமிருந்து வாழ்ந்தனர் என்பதை உணர்த்துகிறது. இப்பகுதியில் உள்ளவர்கள், இதை பஞ்ச பாண்டவர்கள் படுக்கை என்றும் கூறுகின்றனர்.
சமணர்கள் வாழ்ந்த காலத்தில், தாங்கள் செல்லும் பாதையில், எறும்பு உள்ளிட்ட சிறிய உயிர்கள் மிதிபட்டு துன்புறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பாதையை மயில் இறகால் சுத்தம் செய்து கொண்டே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும், தங்களது கொள்கைகளை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகள் மற்றும் கல்வெட்டு கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
அப்பகுதி மக்கள் கூறுகையில், சமணப் படுக்கைகள், 2,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்டிருந்தாலும், தற்போது செதுக்கியது போல், வழவழப்பு தன்மை மாறாமல் காணப்படுகிறது. சமணர்கள் இப்பகுதியில், சமணப் பள்ளிகள் அமைத்து கல்வி, மருத்துவம், மதம் ஆகியவற்றை பரப்பி உள்ளனர். இந்த சமணப் படுக்கையை, பல்வேறு பகுதிகளை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் வந்து பார்த்து செல்கின்றனர் என்றனர்.