பதிவு செய்த நாள்
25
அக்
2019
03:10
அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரின் அதிசயமாகத் திகழ்வது, நாழிக்கிணறு. அதன் நீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது. கடலுக்கு மிக அருகே இருந்தாலும் இதில் நல்ல தண்ணீராக இருப்பது வியப்பான விஷயம்! இந்தக் கிணறு உருவானது சம்பந்தமாக புராணச்சம்பவம் ஒன்று உள்ளது. அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசுரனும் சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தியும், மக்களைக் கொடுமைப்படுத்தியும் ஆட்சி செய்தனர்.
தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கே தாரகாசுரனை முருகன் வீழ்த்தி விட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார். சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இதில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாகப் போருக்கு வந்தான். தனது ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி
போர் புரிந்தான்.
ஆனால், முருகனின் ஆற்றலுக்கு முன்னால் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். சூரபத்மன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன் சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார். போர் முடிந்ததும், தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்பட, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார். அதுவே நாழிக்கிணறு. பதினான்கு அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணற்றின் நீர் உப்பாகவும் சாம்பல் பூத்த நிறத்திலும் இருக்கும். இதன் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்தக் கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இரு க்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறுகள் அமைந்திருப்பது அதிசயத்தினுள் அதிசயம். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்தக் கிணற்று நீரில் நீராடிய பிறகு முருகனை தரிசிக்கச் செல்வது வழக்கம்.