பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
புதுச்சேரி : மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா, கணபதி ஹோமத்துடன் நாளை 29ம் தேதி துவங்குகிறது.
விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு குரு பகவான் பிரவேசிக்கும் குரு பெயர்ச்சி, 29ம் தேதி அதிகாலை 3:18 மணிக்கு நடக்கிறது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கணபதி ஹோமத்துடன், நாளை(28ம் தேதி) காலை 9:00 மணிக்கு பூஜைகள் துவங்குகிறது.
தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. பின், 1,008 கொழுக்கட்டைகள் நைவேத்தியம் செய்யப்படுகிறது. மாலையில், நெய், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர் என 30 வகையான பொருட்களை கொண்டு தொடர் அபிஷேகம் நடத்தப் படுகிறது.நாளை மறுநாள் (30ம் தேதி) அதிகாலையில் குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது.
குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்பட்டு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்துள்ளனர்.