விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் மெய்கண்டார் கோவிலில், நேற்று குருபூஜை நடந்தது. விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லுாரில் சிவஞானபோதத்தை உலகிற்கு உணர்த்திய மெய்கண்டாரின் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர தினத்தன்று, குருபூஜை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று (அக்., 28ல்) இக்கோவி லில் குருபூஜை விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு திருமுறை விண்ணப்பத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் காலை 10:00 மணிக்கு வேத பாராயணம், மெய்கண்டாருக்கு குருபூஜை நடந்தது.மதியம் 12:00 மணிக்கு திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகினார்.
தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு வீணை இன்னிசையும், வள்ளி திருமண பொம்மலாட்டம் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு மெய்கண்டார் வீதியுலாவும் நடந்தது.ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதின கிளைமடம் நிர்வாகி திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.