* மற்றவர்களின் குற்றங்களை மன்னிப்பது மனிதத்தன்மை. மறப்பது தெய்வத்தன்மை. பக்தியால் இந்த இரண்டையும் பெற முடியும். * இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அமைதியுடன் வாழ முடியும். * பசுக்கள், வேதங்கள், கற்பு நெறி தவறாதவர், சத்தியவழி நடப்பவர், துறவியர், தர்மசிந்தனை கொண்டவர் ஆகியோரால் தான் இந்த பூமி இடைவிடாமல் சுற்றுகிறது. * நிலவால் இரவும், சூரியனால் பகலும் ஒளி பெறுகிறது. நல்ல பிள்ளைகளால் குடும்பம் ஒளி பெறுகிறது. * ஒருவர் செய்த தர்மச்செயலால் மண்ணுலகமும், விண்ணுலகமும் ஒளி பெறும். * குணமுள்ள மனைவி, மழலை மாறாத குழந்தை, உழைப்பில் கிடைத்த செல்வம் ஆகியவை அமிர்தத்திற்கு ஈடானவை. * பசிக்கு உணவும், தாகத்திற்கு தண்ணீரும் தரும் தானத்திற்கு இணை வேறில்லை. * ஆறுமுறை பூமியை வலம் வருதல், பத்தாயிரம் முறை காசியில் நீராடல், நூறு முறை ராமேஸ்வரத்தில் குளித்தல் போன்ற புண்ணிய பலன்கள், பெற்ற தாயை ஒருமுறை வணங்கினால் கிடைக்கும். * பாம்புக்கு பால் வார்த்தாலும் அது விஷம் தான் கொடுக்கும். கீழ்த்தரமான மனிதருக்கு உதவி செய்தாலும் தீமையே ஏற்படும். நல்லவர் நட்பால் மனதில் அமைதி உண்டாகும். * தவம் செய்ய காட்டுக்குப் போகவோ, பட்டினி கிடக்கவோ வேண்டாம். குடும்பத்தில் மனைவி, மக்களுடன் வாழ்வதே சிறந்த தவம் தான். * கீழ் நோக்கிப் பிடித்தாலும் தீப்பந்தம் மேல் நோக்கியே எரியும். அது போல உயர்ந்த மனம் படைத்தவர்கள் செல்வத்தில் தாழ்ந்தாலும் எண்ணத்தால் உயர்ந்து நிற்பர். - வேண்டுகிறார் வாரியார்.