மதுரை: ‘சாத்வீக குணத்தின் மகத்துவத்தை கூறும் பகவத்கீதையை பின்பற்றி மக்கள் வாழ வேண்டும்‘ என காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பேசினார்.
மதுரை டோக்நகர் சின்மயா மிஷனிற்கு வருகை புரிந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அவருக்கு ஆரத்தி எடுத்தும், தீபாராதனை ஏற்றியும் வரவேற்றனர்.
விஜயேந்திரர் பேசியதாவது: ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பண்பாடு, கலாசாரம் உள்ளது. அந்த வகையில் நம் நாட்டின் அடையாளம் சாத்வீகம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சுபாவம் உண்டு. நம் சுபாவம் சாத்வீகத்துடன் இருக்க வேண்டும். அதையே ஒவ்வொரு மனிதரும் பின்பற்ற வேண்டும்.
உலக அளவில் நம் தேசத்தில் தான் சாத்வீக குணம் மேலோங்கியுள்ளது. அதுதான் நம் அடையாளம். இதையே பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் உபதேசித்துள்ளார். ஒவ்வொரு மனிதரும் கீதையில் கூறப்பட்ட உபதேசங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்றார்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவயோகானந்த சுவாமிகள், சின்மயா மிஷன் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.