பதிவு செய்த நாள்
07
ஜூலை
2020
04:07
பல்லடம்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் பரவிவரும் இந்நோயை தடுக்க, மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், முக கவசம் அணிந்து, அவ்வப்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும், சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், பொது இடங்களில், 3 அடி இடைவெளி விட வேண்டும் என, 1964ம் ஆண்டு வேதாத்திரி மகரிஷி வெளியிட்ட அறிவுறுத்தி"ஞானமும் வாழ்வும்" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், எந்த காரணத்தை கொண்டும், பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் உள்ளிட்டவற்றை மற்றவர் உபயோகிக்க கூடாது. தவிர்க்க இயலாத சமயத்தில் பிறர் பயன்படுத்திய பாயின் மீது, துணி விரித்து படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில், 3 அடிக்கு ஒருவருக்கு மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது, அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமிநாசினி புகையோ, அல்லது சாம்பிராணி புகையோ இடைவிடாமல் பரப்பி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்க அரசு மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருந்தும், பொதுமக்கள் அவற்றை பின்பற்றுவதில் அசட்டையாக உள்ளனர். இதனிடையே, உடல்நலம் கருதி, 56 ஆண்டுக்கு முன்பே வேதாத்திரி மகரிஷி, மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. புத்தகத்தில் அவர் எழுதிய வரிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.