Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகவத புராணம் பகுதி-3
முதல் பக்கம் » பாகவத புராணம்
பாகவத புராணம் பகுதி-4
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
02:05

18. பலராமன் கல்யாணம்

ஆதிசேஷன் மனைவி வாருணியைப் பார்த்து வருணன் ஆதிசேஷனே பலராமனாக பூவுலகில் அவதரித்துள்ளார். அவர் மகிழுமாறு உதவவேண்டும் என்று வேண்டினான். வாருணி, மதுபான வகைகளுக்கெல்லாம் அதிதேவதை ஆகி மதிரை என்றும் அழைக்கப்படுபவள். பிருந்தாவனத்தில் ஒரு கடம்ப மரப்பொந்தில் ஸந்திதானம் செய்ய மதுமணம் நுகர்ந்த பலராமன் பொந்திலிருந்து மது பெருக்கெடுத்தோடுவதைக் கண்டு கோபிகளுடன் மதுபானம் அருந்தி களித்தார். அந்நிலையில் அருகில் ஓடும் யமுனையைக் கண்ட பலராமர் நீராட அருகில் வருமாறு அழைக்க, யமுனை அவர் கர்வத்தினால் அழைக்கிறார் என்று பலராமர் அழைப்பை நிராகரிக்க, பலராமர் கோபம் கொண்டு தனது ஆயுதமாகிய கலப்பையை எடுத்து அந்த நதியை இழுக்க யமுனை அப்பகுதி முழுவதையும் வெள்ளத்தில் நிறைத்து விட்டு விடுபட்டுச் சென்றாள். யமுனையில் நீராடி எழுந்த பலராமருக்கு மகாலக்ஷ்மி இரண்டு நீலப்பட்டாடைகள் அளிக்க அவர் தோற்றம் மிக அதிக ஒளி பெற்றது. இவ்வாறு இரண்டு மாத காலம் பலராமர் கோகுலத்தில் இருந்துவிட்டு துவாரகைக்கு சென்றார். பலராமர் ஆனர்த்த ரைவத மன்னனுடைய மகளான ரேவதியை மணந்து நிசிதன், உல்முகன் என்ற இரண்டு புத்திரர்களைப் பெற்றார்.

19. ருக்மிணி கல்யாணம்

விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு ஐந்து புத்திரர்களும், ஒரு பெண்ணும் இருந்தனர். மகாலக்ஷ்மி அம்சமாகிய அப்பெண்ணின் பெயர் ருக்மிணி. அவருடைய மூத்த சகோதரன் ருக்மிணியை சிசுபாலனுக்குத் திருமணம் முடிக்க விரும்பினான். ஆனால் ருக்மிணியோ கிருஷ்ணனைப் பற்றிக் கேள்வியுற்று அவருக்கே மாலைசூட விரும்பினாள். அதே நம்பிக்கையில் அவள் ஒரு வேதியரைக் கிருஷ்ணனிடம் தூது விடுத்தாள். அந்தணரைக் கண்ட கிருஷ்ணன் அவரை அன்புடன் வரவேற்று ÷க்ஷம லாபங்களைப் பற்றி விசாரித்தார். அடுத்து, அவர் வந்த காரணம் பற்றி விசாரித்தார். அப்போது அந்தணர் ருக்மிணியால் சொல்லி அனுப்பப்பட்ட செய்தியை பற்றி எடுத்தியம்பினார்.

அச்சுதா, தங்கள் ரூபசவுந்தரியத்தையும், குணவைபவங்களையும் பற்றிக் கேட்ட என் மனம் வெட்கத்தை விட்டு உம்மையே நாடுகின்றது. நான் எனது ஆத்மாவையே தங்களுக்குச் சமர்ப்பணம் செய்து விட்டேன். அல்பனான சிசுபாலன் என்னைத் தீண்டிவிடாமல், நீங்கள் வந்து என்னைப் பாணிக்கிரகணம் செய்து கொள்ள வேண்டும். விவாகத்துக்கு முன்நாள் குலதெய்வத்தைப் பூஜிக்க கவுரிதேவி ஆலயத்திற்குப் போகும்போது என்னைக் கிரகிக்கவும். நீங்கள் இரகசியமாக இங்கு வந்து சிசுபாலன், ஜராசந்தன் ஆகியோரை வென்று என்னை அபகரித்துச் சென்று ராக்ஷச விதிப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ருக்மிணி சொல்லி அனுப்பியதாக அந்தணர் கூறிவேண்டினார்.

இதன் மூலம் ருக்மிணியின் உள்ளத்தை அறிந்த கிருஷ்ணன் புன்சிரிப்புடன், வேதியரே கவலையை விடுங்கள். என்னிடமே உள்ளத்தை அர்ப்பணித்து என்னையே நம்பியிருக்கும் ருக்மிணியை அழைத்து வந்து விவாகம் செய்து கொள்ளுவேன் என்று கூறி, அந்தணரும் கிருஷ்ணரும் தேர் ஏறிச் சென்று விதர்ப்ப நாட்டை அடைந்தனர். சிசுபாலன் கலகம் செய்யக் கூடுமென பலராமரும் சேனைகளுடன் குண்டினபுரம் வந்தடைந்தார். அனுகூலமான செய்தியுடன் திரும்பி வந்த அந்தணரின் பாதங்களில் தலை வைத்து வணங்கித் தனது திருப்தியைத் தெரிவித்துக் கொண்டாள். ருக்மிணியின் தந்தை பீஷ்மகன் ராமலக்ஷ்மணர்களை நன்முறையில் வரவேற்று உபசரித்தான். நகரமாந்தர் ருக்மிணிக்கு ஏற்ற கணவர் கிருஷ்ணனே என்று பேசிக் கொண்டனர்.

கிருஷ்ணனின் திருவடிகளையே மனதில் தியானித்தவளாக ருக்மிணி அம்பிகையைத் தரிசிக்க மங்கல வாத்தியங்களுடன் நடந்து சென்றாள். அங்கே அமைதியாக சிரத்தை, பக்தியுடன் பவானியைப் பூஜித்தாள். ஸ்ரீகிருஷ்ண பகவானே தனக்குக் கணவனாக அருள்புரியுமாறு பிரார்த்தித்தாள். கோயிலிலிருந்து திரும்பிய போது ருக்மிணி மன்னர்களிடையே மாதவனைக் கண்டு மகிழ்ச்சியுற்று தேரில் ஏற சமீபிக்கையில் கிருஷ்ணன் அவளது கரம் பற்றி லாவகமாக இழுத்துத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, பலராமரும் அவர் படையும் பின் தொடர மெதுவாகச் சென்றார். இதுகண்டு கடும் சினம் கொண்ட ஜராசந்தன் கிருஷ்ணரைத் தொடர்ந்து பாணங்களைச் செலுத்த இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் ஜராசந்தன் முதலியோர் தோற்று ஓடினர். சிசுபாலனும் ருக்மிணி கிடைக்காதது பற்றி வருத்தத்துடன் திரும்பி தன் நகர் சேர்ந்தான்.

ஆனால், சிசுபாலனின் நண்பனான ருக்மிணியின் சகோதரன் ருக்மி, ருக்மிணியை மீட்டு வருவதாகச் சூளுரைத்து கிருஷ்ணனைத் தொடர்ந்தான். தனித்துவரும் ருக்மி கோபத்துடன் வாளைக் கையிலேந்தி கிருஷ்ணன் மீது பாய, கிருஷ்ணன் ருக்மியைக் கொல்லத் தயாராக, பின்னர் ருக்மிணியின் வேண்டுகோளின்படி ருக்மியைக் கொல்லாமல் தேர் சக்கரத்தில் கட்டிப் போட்டு அவன் சிகையையும், மீசையையும் கத்தரித்து அவனை உருக்குலைய வைத்தார். அவ்வமயம் பலராமர் உறவினர்களை அவமதிக்கக்கூடாது என்று கூறி ருக்மியை கட்டவிழ்த்து விட்டார். கிருஷ்ணன் ருக்மிணியைச் சமாதானம் செய்து அமைதி படுத்தினார். ருக்மி அவமானத்தால் தன் ஊர் திரும்பாமல் கொதிப்படைந்து போஜகடம் என்ற அவ்விடத்திலேயே தங்கிவிட்டான். இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணன் அரசர்களை ஜயித்து பீஷ்மகரின் புத்திரி ருக்மிணியை துவாரகைக்கு அழைத்து வந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். துவாரகையில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வாழ்ந்து வருகையில் மக்கள் பேரானந்தமொடு ÷க்ஷமமாக வாழ்ந்து வந்தனர்.

ஜாம்பவதி, சத்தியபாமை விவாகம்

சத்ராஜித் மன்னன் சூரியனிடமிருந்து தான் பெற்ற சியமந்தக மணியை அவன் தம்பி பிரசேனன் தன் கழுத்திலணிந்து வேட்டைக்குச் செல்ல, அங்கு ஒரு சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு, மணியையும் எடுத்துச் சென்றது. அச்சிங்கத்தைக் கொன்று மணியை ஜாம்பவான் எடுத்துச் சென்றான். இஃதறிந்த கிருஷ்ணன் குகைக்குள் இருந்த ஜாம்பவானுடன் போர்புரிய அதில் தோற்ற ஜாம்பவான் கிருஷ்ணன் சாக்ஷõத் பகவானே என்றறிந்து மணியுடன், தன் மகள் ஜாம்பவதியையும் திருமணம் செய்து வைத்தான். சத்ராஜித் கிருஷ்ணன் மணியை அபகரித்ததாக எண்ணியிருந்தான். பின்பு உண்மை அறிந்தவுடன் தன் மகள் சத்தியபாமையைக் கிருஷ்ணனுக்கு மனம் செய்வித்து, சியமந்தகமணியையும் கொடுக்க கிருஷ்ணன் மணியை அவனிடமே திருப்பித் தந்துவிட்டார்.

20. இந்திரப் பிரஸ்தத்தில் கிருஷ்ணன்

அரக்கு மாளிகையில் அகப்பட்டு பாண்டவர்கள் இறந்ததாக எண்ணினர். ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பதனால் அவர்களுடைய சேமநலன் தெரிந்து வர கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் சென்றார். பகவானாகிய கிருஷ்ணனைக் குந்தியும், பாண்டவர்களும் வரவேற்று, உபசரித்து பூஜை செய்து ÷க்ஷமம் விசாரித்தனர். அப்போது திரவுபதி கிருஷ்ணனை வணங்கினார். குந்தி தேவி தன் கஷ்டங்களைக் கூறி வருந்தினாள். மேலும் கிருஷ்ணன் வந்துவிட்டதால் இனி கவலை இல்லை என்று அன்புடன் கூறினாள். தருமபுத்திரர் கிருஷ்ணனை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டிட கிருஷ்ணனும் சில மாதங்கள் அங்கு தங்கினார்.

காளிந்தியை மணத்தல்

ஒருநாள் அருச்சுனனும், கிருஷ்ணனும் வனத்தில் வேட்டையாடி களைத்து யமுனை ஆற்றங்கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காளிந்தி என்ற அழகிய பெண் வந்தாள். அவளைப் பற்றி விசாரிக்க அவள் தன் பெயரைக் கூறி யமுனையில் தன் மாளிகையில் வாழ்வதாகவும் பகவான் நாராயணனைத் தன் பதியாக அடைய தவம் இருப்பதாகவும் அவரை அடையும் வரை அங்கேயே இருப்பதாகவும் கூறினாள். இந்திரப் பிரஸ்தத்தில் பகவான் விஸ்வகர்மாவைக் கொண்டு ஓரழகிய நகரத்தை ஏற்படுத்திக் கொண்டு பாண்டவர்களுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தார். அருச்சுனனுக்கு சாரதியாக இருந்து பல அதிசயங்களை நிகழ்த்தினார்.

காண்டவவனம் எதிர்த்தல்

காண்டவ வனத்தை அக்கினிக்கு உணவாக அளிக்க, கிருஷ்ணன் அருச்சனனுக்குக் காண்டீபம் என்ற வில்லையும், அக்ஷயமான அம்புராத் தூணிரத்தையும், உறுதியான கவசத்தையும், ஒரு ரதத்தையும் அழகிய வெள்ளைக் குதிரையையும் பரிசாக அளித்தார். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணன் காளிந்தியுடன் துவாரகையை அடைந்து அவளை மணந்து கொண்டார்.

பல திருமணங்கள்

அவந்தி நாட்டரசன் சகோதரி மித்திர விந்தையை மணந்தார். கோசல மன்னன் நக்னஜித் தன்னிடமுள்ள ஏழு காளைகளை அடக்குபவனுக்குத் தன் மகளை மணமுடிப்பதாகக் கூறியுள்ளதால், அந்த ஏழு முரட்டுக்காளைகளையும் கிருஷ்ணன் அடக்கிட அவன் குமாரி சத்யாவைக் கிருஷ்ணனுக்கு விவாகம் செய்வித்தான். இவளே நப்பின்னை ஆவாள். பின்னர் அத்தை சுருத கீர்த்தியின் மகள் பத்திராவையும், மந்திர தேசத்தரசன் மகள் லக்ஷ்மணாவையும் ஆக எட்டு பட்ட மகிஷிகளுடன் வாழ்ந்து வந்தார் கிருஷ்ணன். மற்றும் இஷ்டப்படி உருவம் கொள்ளும் மத்ரராஜனுடைய மகள் சுசீலை என்பவளையும் மணந்தார்.

21. பிரத்யும்னனும் மாயாவதியும் சம்பராசுரன் வதமும்

கிருஷ்ணன்-ருக்மிணிக்கு மன்மத அம்சனான பிரத்தியும்னன் பிறந்தான். அவன் பிறந்த ஆறாம் நாளில் சம்பராசுரன் என்ற அரக்கன் அந்தக் குழந்தை தன்னைக் கொன்றுவிடும் என்று எண்ணி அதனை முதலைகள், திமிங்கிலங்கள் நிறைந்த லவண சமுத்திரத்தில் எறிந்துவிட்டான். அக்குழந்தையை ஒரு மீன் விழுங்கி விட்டது. அந்த மீன் ஒரு செம்படவன் கையில் சிக்க, அவன் அதை சம்பாசுரனிடமே கொடுத்தான். அவனுடைய மனைவி மாயாவதி என்பவள் அம்மீனைச் சேதிக்க அதன் வயிற்றில் அக்குழந்தையைக் கண்டு, அது குறித்து யோசித்துக் கொண்டு இருக்கையில் அங்கு நாரத முனிவர் வந்தார். அக்குழந்தையின் வரலாற்றைக் கூறினார். அதுகேட்ட அசுரன் மனைவி மாயாவதி அக்குழந்தைக்குப் பலவித வித்தைகளையும் கற்பித்து, அதன் மீது காமுற்று கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தாள். அவன் அவனிடம் பழகும் விதத்தைப் பற்றிப் பிரத்தியும்னன் குறை கூற அவன் அவனுக்குத் தாயில்லை என்பதையும் அவனுடைய உண்மை வரலாற்றையும் கூறினாள்.

தன் விவரம் அறிந்த பிரத்தியும்னன் சம்பராசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றான். பின்னர் அவன் மாயாவதியுடன் புறப்பட்டுத் தன் தந்தையின் அந்தப்புரத்துக்கு வந்து அடைந்தான். எல்லோரும் அவனைக் கிருஷ்ணனென்று நினைக்க ருக்மிணி மட்டும் அவனை அடையாளம் கண்டு கொள்ள, அப்போது நாரதர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு அங்கு வந்தார். கிருஷ்ணன் ருக்மிணியிடம் பிரத்யும்னன் அவள் மகனே என்றும், மாயாவதி அவன் மனைவி என்றும் முற்பிறவி செய்திகளுடன் அறிவித்தார். பிரத்யும்னன் மன்மதன் என்றும், மாயாவதி ரதிதேவி என்றும் தெரிவித்தார். ருக்மிணியின் மகன் பிரத்தியும்னன் தன் மாமன் ருக்மியின் மகளை மணந்தான். அவர்களுக்கு அநிருத்தன் பிறந்தான். ருக்மி கண்ணன் விருப்பப்படி அநிருத்தனுக்குத் தன் பேத்தியைக் கன்னிகாதானம் செய்து வைத்தான். இந்தத் திருமணத்துக்குப் பலராமரும், மற்ற யாதவர்களும் போஜகடம் சென்றிருந்தனர். அங்கு சூதாட்டம் சரியாக ஆடத்தெரியாவிட்டாலும் அந்த ஆட்டத்தில் பலராமனுக்குப் பற்று அதிகம். எனவே, அவன் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்தான்.

நான்காம் முறை விதர்ப்பராஜன், கலிங்கராஜனுடன் ஆடி பலராமன் வெற்றி பெற்றார். அதனை மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாததால் கோபம் கொள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். ருக்மியை அடித்துத் தள்ளினார். தந்தவக்கிரனுடைய பற்களை உதிர்த்துத் தள்ளினார். இவ்வாறு சூதாட்ட வைரிகள் கொல்லப்பட்டனர்.

22. நரகாசுரன் வதம்

நரகாசுரன் பூமிதேவியின் புத்திரன். அவன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். பல தேசத்து அரசகுமாரிகளையும் துன்புறுத்தி வந்தான். ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையை அடைந்தபோது தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறிக்கொண்டு துவாரகைக்கு வந்து, ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி, நரகாசுரனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். சத்ரு நாசகா! பிராக் ஜோதிக்ஷம் என்ற நகரில் பூமி புதல்வன் நரகாசுரன் செய்யும் கொடுமைகள் எண்ணில் அடங்கா. அரசகுமாரர்களை அபகரித்தான். எப்போதும் மழைபொழியும் வருணன் குடை, மந்தரபர்வதத்தின் சிகரம், என் தாயாரின் அமுதம் ததும்பும் குண்டலங்கள், ஆகியவற்றைக் கவர்ந்து கொண்டான். மேலும் எனது ஐராவதத்தையும் அபகரிக்க தக்க சமயம் பார்த்துக் கொண்டுள்ளான் என்று அவன் அநியாயங்களை விளக்கினான். பின்னர், இனி ஆவன செய்யுமாறு பிரார்த்திக்கிறேன் என்றான்.

அதைக் கேட்ட கிருஷ்ணன் புன்சிரிப்புடன் இந்திரனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். உடனே அவர், சத்தியபாமையுடன் கருடாரூடராய் பிராக் ஜோதிஷ நகரத்தை அடைந்து சங்கநாதம் எழுப்பினார். கதாயுதத்தால் கோட்டைச் சுவர்களைத் தகர்த்தார். அதைக் கண்ட முரன் என்னும் அசுரன் கூச்சலுடன், சூலமேந்தி கிருஷ்ணன் மீது பாய்ந்து தாக்கிட, பகவான் அவன் சூலத்தை முறித்து, அவன் தலையையும் அறுத்துத் தள்ளினார். அவனை அடுத்து எதிர்த்த அயக்கிரீவன், பாஞ்சானன் ஆகியோரை அவர்களுடைய படைகளுடன் சுதர்சனச் சக்கரம் எரித்து விட்டது. இறுதியில் எதிர்த்து வந்து பல ஆயுதங்களைப் பிரயோகித்த நரகாசுரனை சக்கராயுதத்தால் இரு பிளவாக்கி வீழ்த்திட, பூமிதேவி அதிதியின் குண்டலங்களை கண்ணனிடம் சமர்ப்பித்து திருவடிகளை வணங்கிப் பிரார்த்தித்தாள்.

நாதனே! நீ வராக அவதாரம் செய்த போது உன் ஸ்பரிசத்தால் இவன் பிறந்தான். இதோ குண்டலங்களை எடுத்துக் கொள். என் மகன் நரகன் செய்த பிழைகளைப் பொறுத்திடுக. நரகாசுரன் மகனான பகதத்தனைக் காப்பாற்றுங்கள். பாவங்களைப் போக்கும் தங்கள் கர கமலங்களை இவன் சிரசில் வைத்து அனுக்கிரகிக்கவும் என்று வேண்டிட பகவானும் பகதத்தனுக்கு அபயம் அளித்து அனுக்கிரகித்தார். பின்னர் நரகனால் பலவந்தமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அரசகுமாரர்களை மீட்டார். மற்றும் வருணன் குடை, மணி பர்வதங்களைப் பெரிய திருவடியின் மேல் ஏற்றிக் கொண்டு சத்தியபாமையுடன் தாமும் ஏறி, அதிதியிடம் குண்டலங்களை ஒப்படைக்க தேவலோகம் சென்றார். நரகாசுரன் இறந்த நாளை மக்கள் அனைவரும் தீபாவளி எனக் கொண்டாட வேண்டும் என்று வேண்டியதாகப் பத்ம புராணம் கூறுகிறது.

23. ருக்மிணி ஊடல் தீர்த்தான்

ஒரு சமயம் கிருஷ்ணன் ருக்மிணியுடன் ஒரு வேடிக்கை செய்தார். ஒருநாள் ருக்மிணி கிருஷ்ணனுக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தாள். அப்போது பகவான், திருமாமன்னர் பலர் உன்னை மணம் புரிய விழைந்தனர். ஆனால் நீ, பகைவர்களுக்கு அஞ்சி, கடலில் ஒளிந்து வாழும் தகுதியற்ற என்னை வரித்தது ஏன்? மற்றும் நானோ பரம ஏழை. நட்பும் விவாகமும் ஏற்றத் தாழ்வுள்ள இடத்தில் பொருந்தாது. நான் குணங்களற்றவன். துறவிகளின் தோழன். உதாசீன குணமுள்ளவன். எனக்கு எதிலும் விருப்பம் கிடையாது. நீ என்னிடம் என்ன சுகத்தை அடைவாய் என கூறினார் விளையாட்டாக. பகவான் தன்னையே விரும்புவதாகவும், அதனாலேயே விட்டுப் பிரிவதில்லை என்றும் எண்ணிய ருக்மிணியின் கர்வத்தை அடக்கவே அவ்வாறு பேசினார் அவர். பரிகாசப் பேச்சு அது என்று அறியாத ருக்மிணி மனம் கலங்கி, மயங்கி விழ, அந்தப் பிரிய பத்தினியை வாரி அணைத்து சமாதானப்படுத்தினான் கண்ணன்.

அப்போது மனம் தெளிவுற்ற ருக்மிணி பகவானை நோக்கி, நான் உங்களுக்கு எவ்வகையிலும் சமமானவளல்ல. உங்களுடைய மகிமை எனக்கேது. நீரோ ஞானி. நானோ அஞ்ஞானி. இகபர சுகங்களை அளிக்கும் தங்கள் பாதகமலங்களே எனக்குத் தேவை. அதற்காகத்தான் சர்வாத்ம சொரூபியான உங்களை விரும்பி மணந்தேன் என்று பதில் கூறினாள். உடனே கிருஷ்ணன் அவளிடம் அன்பும், கருணையும் கொண்ட மனத்தனாய் ருக்மிணியைப் பார்த்து பிரியே! பலனையே விரும்பாமல் என்னிடம் பக்தி செலுத்தும் நீயே மிகச்சிறந்தவள். அனன்ய பக்தியே சம்சார தாபத்தை நிவர்த்தி செய்கின்றது. அன்பினால் என்னை வென்ற நீயே பதிவிரதை என்று புகழாரம் சூட்டினார்.

24. நாரதரும் கிருஷ்ணனும் (பாகவதம்)

கிருஷ்ணனுக்கு பட்ட மகிஷிகள் எண்மர், மற்றும் நரகாசுரனிடம் சிறை மீட்ட பதினாராயிரம் பெண்கள் என்று பல மனைவியர் உள்ளனர். அவர் எப்படி எல்லாரையும் சமாளிக்கிறார்? என்ற ஐயம் மனதில் தோன்ற அதனை நேரில் கண்டு அனுபவிக்க ஒருநாள் நாரதர் துவாரகைக்கு வந்தார். கிருஷ்ண பத்தினிகளின் அழகிய மாளிகைகளைக் கண்டு பிரமித்தார். நேராக ருக்மிணியின் மாளிகையில் நுழைந்தார் நாரதர். அங்கு ருக்மிணி கிருஷ்ணனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். நாரதரைக் கண்ட பகவான் உடனே எழுந்து, அவரை வரவேற்று உபசரித்தார். நான் என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார். அப்போது நாரதர், பிரபோ, இதென்ன லீலை! தங்கள் திவ்ய சரணார விந்தங்களைச் சேவிப்பவனுக்கு வேறென்ன வேண்டும்! மோக்ஷ சுகத்தை அளிக்கும் உங்கள் பாதகமலங்களின் நினைவு என் மனத்தை விட்டு அகலாமலிருக்க அருள்புரிவீராக என்றார்.

மற்றொரு மாளிகையில் நாரதர் நுழைய அங்கு பகவான் உத்தவருடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார். நாரதரைக் கண்ட அவர் அவரிடம் குசலம் விசாரித்தார். இன்னொரு வீட்டில் பகவான் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். வேறொரு வீட்டில் பகவான் புராண பிரவசனம் கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த வீட்டில் யாகாக்கினியில் ஹோமம் செய்து கொண்டிருந்தார். ஒரு வீட்டில் நீராடச் சென்று கொண்டிருந்தார். ஆங்கே மற்றோர் இல்லத்தில் பிராம்மண சமாராதனை நடந்து கொண்டிருந்தது. பகவான் அவர்களைப் பரிவுடன் உபசரித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு இல்லங்கள் தோறும் பகவான் பற்பல செயல்களில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியும், வியப்பும் அடைந்தார். பிறகு கிருஷ்ணரை வணங்கி, யோகேச்வரா! உமது மாயாசக்தியை இன்று கண்டு கொண்டேன். உமது லீலா வைபவங்களைப் பாடிக் கொண்டே உலகெங்கிலும் உலாவப் போகிறேன். எனக்கு விடைகொடுங்கள் என்று கூறி விடைபெற்றார். அப்போது பகவான் உலக மக்களுக்கு வழிகாட்டவே அவற்றைச் செய்து வருவதாகக் கூறி ஆனந்தமாகச் செல்லும்படி அருள்புரிந்தார்.

25. பாரிஜாதபஹரணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

நரகாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணனும், சத்தியபாமையும் அதிதியைக் கண்டு குண்டலங்களைத் தந்தனர். அதிதி மகிழ்ந்து வாசுதேவனைத் துதித்தாள். தாமரைக் கண்ணா! பரமார்த்தம் தெரியாமல் மோகம் செய்யும் மாயை உன்னுடையது. அதனால் ஆன்மா அல்லாததை மூடன் ஆன்மாவென்று எண்ணி பாதிக்கப்படுகிறான். நான் உன்னை ஆராதித்தது மோட்சத்துக்காக அல்ல. அது உன் மாயையே யாம். நீயே ஞானம் போன்றுள்ள அஞ்ஞானத்தை அழிக்க வேண்டும். உன்னுடைய ஸ்தூல வடிவைக் காண்கின்றேனே தவிர சூக்ஷ்மமான ரூபத்தைக் காணவில்லையே எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன் என்றாள். அப்போது பகவான் அதிதியிடம், அம்மா, நீ எங்களுக்குத் தாய் ஆனதால் எங்களை அனுக்கிரகியும் என்றார். பிறகு சத்தியபாமையும் தன்னை அனுக்கிரகிக்குமாறு அதிதியிடம் வேண்டினாள். இருவருக்கும் அதிதி ஆசி கூறினாள். மேலும் அதிதி இந்திரனையும் கிருஷ்ணனையும் பூசித்தாள்.

அவ்வமயம் அங்கு வந்த இந்திராணி சத்தியபாமையை மானிடப் பெண் என்று எண்ணி பாரிஜாத மலரைக் கொடுக்காமல் தானே சூடிக் கொண்டாள். கிருஷ்ணன் சத்தியபாமையுடன் தேவலோகத்து நந்தவனங்களை எல்லாம் சுற்றிப் பார்க்கலானார். அப்போது அங்கு பாற்கடலில் தோன்றிய பாரிஜாத மரத்தைக் கண்டார். அப்போது சத்தியபாமை கிருஷ்ணனிடம், நீங்கள் நான் தான் உங்களுக்குப் பிரியமானவள் என்றால், இந்தப் பாரிஜாதத் தருவை துவாரகைக்குக் கொண்டு போக வேண்டும். இந்தப் பாரிஜாத மரத்தை என் மாளிகையின் புழக்கடையில் கொண்டு போய் வைக்க வேண்டும். நான் இந்த மலர்களைக் கொண்டு, என் கூந்தலை அலங்கரித்து மற்ற பத்தினிகளின் முன் மிகவும் சிறந்திருக்க வேண்டும். இது என் விருப்பம் என்றாள். உடனே கிருஷ்ணன் அந்த மரத்தை அடியோடு பெயர்த்து கருடனின் மீது வைத்தார். அதுகண்டு காவற்காரர்கள் தடுத்தனர். மேலும், அது சசிதேவிக்குப் பிரியமானது. இதை எடுத்தால் தேவர்களுடன் போர் செய்ய வேண்டும் என்றனர்.

அப்போது சத்தியபாமை பாற்கடலில் தோன்றிய இது அனைவர்க்கும் பொது. இதை சத்தியபாமை எடுத்துச் சென்றாளென கூறுங்கள் என்று சொன்னாள். அதுகேட்ட இந்திராணி இந்திரனைத் தூண்டிவிட அவன் படையுடன் வந்து கிருஷ்ணனை எதிர்க்க பெரிய போர் நடந்தது. இறுதியில் கிருஷ்ணன் இந்திரன் ஏவிய வச்சிராயுதத்தைப் பற்றிக் கொண்டு, இந்திரா நில்! என்று முழங்கினார். வச்சிராயுதத்தை இழந்த இந்திரன் ஓடிப்போக முயன்றான். கருடனால் சிதைக்கப்பட்ட ஐராவதம் சோர்ந்து ஓட முடியாததால் இந்திரன் மேலும் தவித்தான். அப்போது சத்தியபாமை இந்திரனிடம், இனி கர்வியான உன் மனைவி பாரிஜாத மலரை அணிய முடியாது. பாரிஜாதத்தைக் கொண்டு போ. அவள் தன் கர்வத்தால் தன் மாளிகையில் என்னை மதிக்கவில்லை. பெண்மையால் ஆழ்ந்திராத-சித்தமுடைய நான் என் கணவரின் மகிமையைக் கொண்டாடி உன்னுடன் போர் செய்தேன். புருஷன் பெருமையைப் பற்றி கர்வப்படாத பெண் உலகில் இல்லை. ஆனால் சசி, அதற்காக மட்டுமின்றி உருவினாலும் கர்வம் கொண்டுள்ளாள் என்றாள்.

அப்போது இந்திரன் அடிபணிந்தான். ஓடவில்லை. எவன் எல்லாருக்கும் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவாக இருக்கின்றானோ அத்தகைய பகைவனால் ஜெயிக்கப்பட்ட எனக்கு வெட்கம் ஏதும் இல்லை. எவன் யாராலும் ஆக்கப்படாமல் தானே ஈஸ்வரனாய், அஜனாய், நித்தியனாய், தனது திருஉள்ளத்தால் உலக நன்மை கருதி மானிடனாய் அவதரித்திருக்கிறானோ அந்தப் பகவானை வெல்ல வல்லவர் யார்? நான் அவரிடம் தோற்றது நியாயந்தான் என்றான்.

26. தருமரின் ராஜசூய யாகம்

சுகதேவர் பரீக்ஷித்திடம் மீண்டும் கூறலானார்: கிருஷ்ணன் ஒரு நாள் சாத்யகி, உத்தவர் ஆகிய நண்பர்களும், விருஷ்ணிகளும், போஜர்களும் அருகிருக்க அரியாசனத்தமர்ந்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில் பல தேசத்தினர் ஜராசந்தனால் சிறையில் அடைக்கப்பட்டுப் பெருந்துயரை அனுபவித்து வருகின்றனர். அவர்களைத் துஷ்டனிடமிருந்து காப்பாற்றி விடுதலை செய்யுமாறு என் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பகவான் என்ன, எப்படிச் செய்ய வேண்டுமோ, உடனே செய்யப் பிரார்த்திருக்கிறோம் என்று ஒருவன் வந்து கூறினான். அவ்வமயம் நாரத முனிவரும் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது பகவான் அவரிடம், மூவுலகம் சஞ்சரிக்கும் நீங்கள் நமது பிரிய பந்துக்களான பாண்டவர்கள் நலமாய் இருக்கிறார்களா? அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்றும் கேட்டார். அதற்கு நாரதர் உமக்குத் தெரியாததா? எனினும் கூறுகிறேன். தர்மபுத்திரர் ஆராதிக்க விரும்புகிறார். அதற்குத் தங்கள் அனுமதியும் கோருகிறார் என்றார் நாரதர். அப்போது பகவான் உத்தவரின் ஆலோசனையைக் கேட்டார். அதற்கு உத்தவர் ராஜசூய யாகம் செய்பவர்கள் திக்விஜயம் செய்யும்போது ஜராசந்தனை வதம் செய்து சிறைப்பட்ட அரசர்களை விடுதலை செய்து காத்திடலாம். சரணாகதர்களை ரக்ஷித்த புகழும் உமக்கு ஏற்படும். யஜ்ஞ காரியமும் நிறைவேறும் என்றார்.

ஜராசந்தனை வெற்றி கொள்ள ஒரே யுக்திதான் உள்ளது. அவன் பிராம்மணர்களைத் தெய்வமாகப் போற்றுகிறவன். பீமன் ஒருவனாலேயே அவனை வெல்ல முடியும். எனவே கபடமாக அந்தணர் வேஷத்தில் சென்று துவந்த யுத்தத்திற்கு யாசித்து ஒப்புக் கொள்ளச் செய்வதே சிறந்த உபாயம். அவ்விருவர்களும் உமது முன்னிலையில் துவந்த யுத்தம் செய்தால் ஜராசந்தன் கொல்லப்படுவான். சிறையிலுள்ள மன்னர்களும் ரக்ஷிக்கப்படுவர். யாகமும் பூர்த்தியாகும் என்றார் உத்தவர். இதைக் கேட்ட அனைவரும் உத்தவரைக் கொண்டாட, கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் செல்ல ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டார். நாரதரும் விடைபெற்றுச் சென்றார். ராஜதூதனிடமும் அபயம் கூறி அனுப்பினார். இந்திரப் பிரஸ்தம் வந்து சேர்ந்த கிருஷ்ண, பலராமர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் உரிய முறையில் வரவேற்றனர். இருதரப்பினர்களும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு வணங்கினர். தருமரும் கிருஷ்ணனைப் பூசித்து அவர் தனது பரிவாரங்களுடன் தங்குவதற்குத் தக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

தருமன் கிருஷ்ணரிடம் ராஜசூய யாகம் பற்றிக் கூறிப் பகவான் அனுக்கிரகத்தை வேண்டினார். அப்போது கிருஷ்ணர், எல்லா தேசத்து அரசர்களையும் வென்று, பூமியை உமது வசப்படுத்திக் கொண்ட பிறகே யாகத்தைத் துவக்க வேண்டும் என்றார். தருமர் தனது நான்கு சகோதர்களையும் நான்கு திசைகளில் அனுப்பினார். பல அரசர்களை அவர்கள் வென்று ஏராளமான ஐச்வர்யங்களை திரட்டிக் கொண்டு வந்து தருமரிடம் ஒப்படைத்தனர். ஜராசந்தன் மட்டும் ஜயிக்கப்படவில்லை. அப்போது கிருஷ்ணர் உத்தவர் கூறிய உபாயத்தைக் கூறினார்.

ஜராசந்தன் வதம்

கிருஷ்ணன், பீமன், அருச்சுனன் மூவரும் அந்தணர் வேடத்தில் மகத நாடு சென்றனர். ஜராசந்தன் அதிதிகளை உபசரித்துப் பூஜை செய்தான். அப்போதும் அவர்கள் தாங்கள் யாசகர்கள் என்றும், தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யுமாறும் வேண்டினர். ஜராசந்தன் அவர்களை நம்பமுடியாமல் யோசனை செய்தான். எனினும், அவர்கள் விருப்பத்தைக் கூறுமாறு கேட்டான். அப்போது கிருஷ்ணன் துவந்த யுத்தம் செய்வதையே தாங்கள் யாசிப்பதாகக் கூறினார். அவர்கள் யாரென்று புரிந்து கொண்ட ஜராசந்தன் கிருஷ்ணன் கோழை என்றும், அர்ஜுனன் சமமில்லாதவன் என்றும் எனவே பீமசேனனே போர்புரியத் தக்கவன் என்றும் அவன் தயாராக இருப்பதாயும் கூறினான். முதலில் பீமனுக்கும், ஜராசந்தனுக்கும் கதாயுத்தம் நடந்தது. பிறகு துவந்த யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் சளைக்காமல் போர் செய்வதைக் கண்ட கிருஷ்ணன் ஒரு குச்சியை எடுத்து இரண்டாக பிளந்து முனைகள் மாற்றி எறிந்தார். அதைப் புரிந்து கொண்ட பீமன் ஜராசந்தனைக் கீழே தள்ளி ஒரு காலால் அவன் காலை மிதித்து, இருகைகளாலும் அவனுடைய மற்றொரு காலை உறுதியாகப் பிடித்து வேகமாகக் கிழித்து தலைகால் மாற்றி இரு பக்கங்களில் வீசி எறிய ஜராசந்தன் உயிர் நீத்தான்.

பிறகு, பகவான் சிறையிலிருந்த மன்னர்களை விடுவித்தார். அவர்களுக்கு உணவும் உடையும் அளித்தார். அரசர்கள் துன்பங்களும், சிரமங்களும் நீங்கப் பெற்று பகவானைக் கண்டு மெய்மறந்து துதி செய்தனர். கிருஷ்ணன் அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினார். பிறகு ஜராசந்தன் மகன் சகாதேவனுக்கு முடிசூட்டி மகதநாட்டு மன்னன் ஆக்கினார். பிறகு பீமார்ச்சுனர்களும், கிருஷ்ணனும் இந்திரப் பிரஸ்தம் அடைந்து யுதிஷ்டிரரிடம் நடந்தவற்றைக் கூறினர். யுதிஷ்டிரர் கிருஷ்ணனைப் பூசித்து அவர் அனுமதி பெற்று ராஜசூய யாகத்தைத் தொடங்கினார். வேதியர்கள் யாகத்தை விதிமுறை நழுவாமல் சிரத்தையுடன் நடத்தி வைத்தனர். யாக முடிவில் தர்மர் அக்ரபூஜை செய்வதற்கு உரியவர் யார் என்பது பற்றி ஆலோசித்தார். அப்போது சகாதேவன், சாந்த சொரூபியும், பரிபூர்ணரும், பேதமற்றவருமாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கே அக்ரபூஜையைச் செய்வோம். அதுவே தக்கது; சிறப்புடையது என்றான். எல்லோரும் அதனை ஆமோதிக்க கிருஷ்ணனைப் பூஜித்தனர். உயர்ந்த வஸ்திர பரணங்களை அளித்து, பூக்களால் ஆனந்தக் கண்ணீருடன் அர்ச்சனை செய்தனர். அனைவரும் கைகூப்பி நமோ நம, நமோ நம என்று கோஷித்தனர்.

சிசுபாலன் வதம்

இந்த நிகழ்ச்சிகளைக் கண்ட சிசுபாலன் ஆத்திரமடைந்தான். கிருஷ்ணன் புகழைக் கேட்க சகிக்காமல் கொந்தளித்தான். இதென்ன அநியாயம்! அறிவில்லாத சிறுவனின் ஆலோசனையைக் கேட்கும் காலம் வந்து விட்டதே! குணக்கேடான இடையனுக்கா அக்ர பூஜை செய்வது! தர்மத்தை அனுஷ்டிக்காத அற்பனுக்கா அக்ரபூஜை என்று குமுறினான். இந்த பகவத் நிந்தனையை கேட்டவர் வெளியேறினர். உடனே சக்கராயுதத்தைப் பிரயோகித்து சிசுபாலன் சிரத்தைச் சேதித்தார். அப்போது சிசுபாலன் உடலிலிருந்து ஒரு ஒளி எழுந்து பகவானில் சேர்ந்து மறைந்தது.

யாக முடிவு

சிசுபாலன் பகவானிடம் துவேஷத்தை வளர்த்து எப்போதும் பகவான் நினைவாகவே இருந்ததால் பகவத் சொரூபத்தை அடைந்தான். தக்ஷிணைகளையும், தானங்களையும் உரியவர்களுக்கு நல்கி, பெரியோர்களுடன் தருமபுத்திரர் கங்காதீரத்தை அடைந்து மங்களமான அவப்ருத ஸ்நானத்தையும் செய்து யாகத்தை முடித்தார். சில மாதங்கள் கழித்து கிருஷ்ணன் தன் மனைவி, மக்கள் மந்திர பிரதானிகளுடன் துவாரகை புறப்பட்டுச் சென்றார்.

27. உஷை பரிணயம்

கிருஷ்ணனுக்கு பத்தினிகள் மூலம் அனேக புத்திரர்கள் பிறந்தனர். அவர்களுள் ருக்மிணியின் புத்திரன் பிரத்யும்னன் மூத்தவன், பிரத்யும்னனுடைய பிள்ளை அநிருத்தன். இவன் மகாபலி சக்கரவர்த்தியின் பவுத்திரியும், பாணாசுரனின் புத்திரியுமான உஷையை மணந்து கொண்டான். இனி உஷா பரிணயம் பற்றிய முழு சரிதத்தையும் முனிவர் கூறலானார்.

உஷையின் காதல்

பாணனுக்கு உஷை என்னும் மகள் இருந்தாள். அவளுக்குத் தக்க வயது வந்ததும் ஒருநாள் அவன் சிவனும் பார்வதியும் கூடி மகிழ்ச்சியுடன் இருப்பதை உளவு பார்த்துவிட்டாள். தானும் அவ்வாறு மகிழ ஆசைப்பட்டாள். அதை அறிந்த பார்வதி அவளும் அவள் புருஷனுடன் கூடி மகிழ்வாள் எனக் கூறினாள். அப்போது உஷை தன் கணவராகக் கூடியவன் யார்?எப்போது அந்தச் சுகம் கிடைக்கும்? எனக் கேட்டாள்.

உஷையின் கனவு

அப்போது பார்வதி வைகாசி மாதச் சுக்கிலபக்ஷத் துவாதசியன்று அவள் கனவில் ஒருவன் களிக்கப் போவதாகவும் அவனே அவளுக்குக் கணவனாவான் என்றும் கூறினாள். அதேபோல் ஒருநாள் ஒரு சுந்தர புருஷனை அவள் கனவில் கண்டாள். கனவிலேயே புலம்ப ஆரம்பித்தாள். அப்போது அவளுடைய அன்புத்தோழி சித்திரலேகை ஏன் அப்படிப் புலம்புகிறாள் என்று கேட்டாள். முதலில் வெட்கப்பட்ட உஷை பின்னர் தோழியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகப் பார்வதி கூறியதையும், அதன்படி தான் கண்ட கனவினையும் விவரித்தாள். மேலும் அவனை அடைவதற்கான உபாயத்தையும் அவளே செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். சித்திரலேகையும் முயற்சி செய்வதாகக் கூறினாள். ஆனாலும் ஏழு (அ) எட்டு நாட்களாகும் என்றும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றாள்.

அனைத்து தேவர், கந்தருவர், அசுரர், மனிதர்களில் வாலிபர்களுடைய ஓவியங்களை வரைந்து உஷையிடம் காண்பித்தாள். இவ்வாறு காட்டுகையில் இராமகிருஷ்ணர்கள், பிரத்தியும்னன் படங்களைக் கண்டு நாணம் கொண்ட உஷை கடைசியில் அநிருத்தன் ஓவியத்தைக் கண்டவுடன் வெட்கமின்றி அவனே தன் கனவில் வந்தவன் என்றும், கலவி மகிழ்ச்சி அளித்தவன் என்றும், அவன் தான் கனவு நாயகன் என்றும் உரைத்தாள்.

அநிருத்தன் கட்டுப்படல்

சித்திரலேகை தனது யோகவித்தை பலத்தால் வான்மூலம் துவாரகை சென்று, அநிருத்தனைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தப்புரத்தில் சேர்த்திட, உஷை காதல் மிகக் கொண்டு அவனோடு தான் விரும்பிய போகங்களை அனுபவித்து வந்தாள். இதை அறிந்த அந்தப்புர காவலாளர்கள் பாணாசுரனிடம் சென்று கன்னிமாடத்தில் ஓர் அரசகுமாரன் இருப்பதை எடுத்துக் கூறினர். இதனால் கோபங்கொண்ட பாணாசுரனுக்கும் அநிருத்தனுக்கும், போர் மூண்டிட அநிருத்தன் வென்றான். அப்போது பாணாசுரன் அமைச்சன் மாயை கொண்டு போர் புரிய ஆலோசனை கூற, அந்த மாயப்போரில் அநிருத்தனைப் பாணாசுரன் நாகாஸ்திரத்தால் கட்டிப்போட்டான்.

பாணனின் வருத்தம்

உஷையின் தந்தை பாணாசுரன் ஒரு சமயம் சிவபெருமானிடம், ஆயிரம் கைகள் இருப்பதால் வெறுப்பே உண்டாகிறது. போர் வந்தால் தானே அவற்றால் பயன்? எனவே யுத்தம் வருமா? என்று கேட்டான். அதற்குச் சிவபெருமான் பாணா! மயில் அடையாளமுள்ள உன் வீரக்கொடி எப்பொழுது முறிந்து விழுகிறதோ, அப்போது போர் ஒன்று எழும் என்று கூறினார். துவாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்கள் எண்ணிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நாரதமுனிவர் சித்திரலேகை என்பவள் தன் யோக சக்தியால் அநிருத்தனை பாணாசுரன் மகள் உஷையிடம் சேர்த்தது முதல் அநிருத்தன் நாகாஸ்திரத்தால் கட்டுப்பட்டிருக்கும் வரையில் விவரமாக எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணன் கருடாரூடராய் பலராமர், பிரத்தியும்னர் ஆகியோருடன் சோணித புரத்திற்குச் சென்றார். அங்குக் காவலில் இருந்த சிவகணங்கள் எதிர்த்தன. கிருஷ்ணன் பாணபுரத்திற்கு வந்தான். சைவஜுரம் கிருஷ்ணனைப் பாதிக்க விஷ்ணு ஜ்வரம் ஓடி ஒளிந்தது. பிறகு கிருஷ்ணர் அக்கினிதேவர் ஐவரையும், அவர்களுடன் வந்த சேனையையும் வென்றிட, பாணாசுரன் கிருஷ்ணனுடன் போர் செய்ய வந்தான். இருவருக்கும் மிகக்கொடிய யுத்தம் நடைபெற்றது.

கிருஷ்ணன் அனுப்பிய அஸ்திரத்தால் சிவன் செயலற்றுப் போனார். அடுத்து முருகனையும் கிருஷ்ணன் தோற்கடித்தார். மேலும் பாணாசுரன் போர் செய்ய அவன் கரங்களைச் சேதிக்க சக்கராயுதத்தைப் பிரயோகித்தார் கிருஷ்ணன். அது பாணாசுரனின் ஆயிரம் கரங்களையும் அறுத்தெறிந்து திரும்பவும் கிருஷ்ணனை அடைந்தது. அப்போது மீண்டும் சக்கரம் ஏவி பாணனைக் கொல்ல நினைக்கையில், பாணனுக்கு உதவியாக இருந்த சிவபெருமான் கண்ணனிடம் வந்து தான் அவனுக்கு அபயம் அளித்திருப்பதால் அவனை மன்னித்தருள வேண்டினார். அப்போது கிருஷ்ணன் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று சக்கரப் பிரயோகம் செய்யவில்லை. மேலும் சிவன் அபயம் கொடுத்தது, நான் கொடுத்ததேயாகும். உன் விஷயத்தில் நான் அனுக்கிரகம் உடையவன். நான் துவாரகை செல்கிறேன். நீயும் உன் இடம் செல்க என்று கூறினார். பிறகு அநிருத்தன் இருக்குமிடம் செல்ல கருடனின் காற்றுப்பட்டதும் நாகபாசம் அகன்றது.

கிருஷ்ணன் அநிருத்தன் உஷையுடன் பிரத்தியும்னனுடன் துவாரகை வந்தடைந்தார். அங்கு தம் தேவியரோடும், புத்திரி பவுத்திரர்களுடன் வாழ்ந்து வந்தார். இவ்வாறு பராசரர் மைத்திரேய முனிவரிடம் உஷை பரிணயம் வரலாற்றை எடுத்துரைத்தார்.

28. பவுண்டரன் மரணம்-காசி தகனம்

புண்டரக தேசாதிபதியைச் சிலர் அவர் ஸ்ரீவாசுதேவ அவதாரம் என்று கூறினர். அவன் தானே வாசுதேவன் என்று கூறிக்கொண்டு விஷ்ணுவின் சின்னங்களான, சங்கு சக்கர ஆயுதங்கள், வனமாலை ஆகியவற்றை அணிந்து கொண்டான். மேலும் அவன் ஒரு மூடனைக் கிருஷ்ணனிடம் அனுப்பி, தானே உண்மையான வாசுதேவன் என்றும், எனவே கிருஷ்ணன் அவன் சின்னங்களை விட்டு விடுமாறும் கூறி அனுப்பினான். அப்போது கிருஷ்ணன் புன்சிரிப்புடன் தூதரிடம் நான் அவன் எண்ணத்தை அறிந்து கொண்டேன். அவன் சொன்னபடி செய்கிறேன். எல்லாச் சின்னங்களையும் தரித்து, காசி வந்து இந்தச் சக்கரத்தை அவனிடமே விட்டு விடுகிறேன் என்று இருபொருள்படும்படி கூறி அனுப்பினார். பிறகு கண்ணபிரான் கருடாரூடராய் பவுண்டரக வாசுதேவனின் பட்டணம் சென்றார்.

வாசுதேவர் இருவர் போர்

இதையறிந்த காசி மன்னன் பெரும்படையோடு போருக்கு வந்தான். தனது சின்னங்களை அணிந்து வந்த பவுண்டரகனை கிருஷ்ணர் கண்டார். அவன் பவுண்டரகனிடம் சக்கரத்தையும், கதையும் அவனிடமே எறிந்ததாகவும் அவன் அவற்றிற்குப் பாத்திரமாகலாம் என்றும், கருடனை அனுப்புவதாகவும், அவனைக் கொடியில் ஏற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினான். சக்கரம் பொய் வாசுதேவனை அறுத்தது. கதையை முறித்தது. கொடி விழுந்தது. அப்போது காசி மன்னன் நண்பன் சாரங்கத்தோடு வர, கண்ணன் தன் சாரங்க வில்லை வளைத்து பாணவர்ஷம் பொழிந்து காசிராஜனின் சிரசை அறுத்து அந்தத் தலையை காசி நடுத்தெருவில் விழும்படி எறிந்தார்.

காசி எரிந்தது

அஃதறிந்த மன்னன் மகன் சிவனை ஆராதித்து கிருஷ்ணனை வதை செய்ய ஒரு பூதத்தை சிருஷ்டித்துத் தர வேண்டிட, சிவனருளால் தக்ஷிணாக்கினியிலிருந்து பூதம் தோன்றியது. அது கிருஷ்ணனைக் கொல்ல துவாரகை ஓடியது. அதைக்கண்ட கிருஷ்ணன் தனது சக்கராயுதத்தைப் பிரயோகிக்க, அது பூதத்தைத் தொடர்ந்து துரத்த அது காசி நகரையே அடைந்து ஏவினவர்களையும், காசி நகரத்தையும் எரித்து விட்டது. இவ்வாறு காசி நகரம் தகனமாகியது. சக்கரம் பகவானின் கையில் திரும்ப வந்தடைந்து அலங்கரித்தது.

29. உத்தம நண்பர்கள் கிருஷ்ணரும் குசேலரும்

சுகமுனிவர் கிருஷ்ண, குசேலம் (ஸுதாமா) சரிதம் கூறலானார். குசேலர் விஷய சுகங்களில் பற்றற்றவராய், ஞானியாய், சாந்த சீலராய் விளங்கினார். புலன்களை வென்று, தீவிர வைராக்கியத்துடன், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் தன் மனைவி க்ஷத்க்ஷõமா (சுசீøலை) மற்றும் இருபத்தேழு குழந்தைகளுடன் எளிய, வறிய வாழ்க்கை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் மனைவி குடும்பத்தின் தரித்திர நிலையைக் குறிப்பிட்டு குசேலரின் பால்ய சினேகிதர் கிருஷ்ணனைத் தரிசித்து திரவிய சகாயம் பெற்று வருமாறு வேண்டினாள். சரணமடைந்தவரைக் காத்திடும் அச்சரணாகத வத்சலன் அள்ளித்தரும் அச்சுதன் அல்லவா என்றாள். அப்போது குசேலர் வெறுங்கையுடன் கிருஷ்ணனிடம் எவ்வாறு செல்வது என்று கூறிட, அவர் மனைவி தான் சேர்த்து வைத்திருந்த சிறிதளவு அவலை மூட்டை கட்டி அவரிடம் கொடுத்தாள்.

மகாபிரபுவான கிருஷ்ணனின் தரிசனம் ஏழை பிராம்மணனாகிய தனக்கு கிடைக்குமா என்ற ஐயத்துடன் புறப்பட்ட குசேலர் துவாரகையை அடைய காவலர் அவரை அனுமதிக்கவில்லை. அப்போது ருக்மிணியுடன் கட்டிலில் அமர்ந்துள்ள கிருஷ்ணனைக் கண்டார். வெகுதொலைவில் வரும்போதே குசேலரைக் கண்டுவிட்ட கிருஷ்ணன் தனது பால்ய சிநேகிதன் நலிவுற்றிருந்த குசேலரைக் கண்டு, மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து வரவேற்று, தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று வெகுவாக உபசரித்து, ருக்மிணிக்கும் அவரை அறிமுகம் செய்துவித்தார். பாதபூஜை செய்தார். கிருஷ்ணன் குசேலரின் ÷க்ஷமநலம், குடும்பத்தில் மனைவி மக்கள் பற்றி எல்லாம் விசாரித்து கடைசியில், எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்? என்று வினவ, குசேலர் மவுனமாக இருக்க, கிருஷ்ணன் அவர் மேல் துணியில் இருந்த முடிப்பைக் கண்டு, அதனை அவிழ்த்து அதிலிருந்த அவலை ஒரு பிடி கையில் எடுத்துக் கொண்டு, தனக்கு அவல் என்றால் ரொம்பவும் பிடிக்கும் என்று கூறிக் கொண்டே ஆவலுடன் உட்கொண்டார்.

அவர் இன்னொரு பிடி அவலை உட்கொள்ள ருக்மிணி அதனைத் தடுத்தாள். உமது திருப்திக்கு அது போதும் என்றாள். கிருஷ்ணன் குசேலரின் வருகையின் காரணம் அறிந்து ஒரு பிடி உட்கொண்டதன் மூலமே மிகுதியான செல்வத்தைக் குசேலருக்கு அளித்துவிட்டார். இது கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் மட்டுமே தெரியும். குசேலர் உதவி கேட்கவில்லை. பகவான் அளித்ததை அறியவுமில்லை. இதை நினைத்துக் கொண்டே கிருஷ்ணனிடம் விடைபெற்று வீடு திரும்பினார். பகவானுடைய தரிசனம் கிடைத்ததே பெருத்த லாபமென்று எண்ணிக் கொண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் தன் ஊர் அடைந்த அவர் தன் இல்லம் இருக்குமிடம் தெரியாமல் தவித்தார்.

அவர் வீடு சிறந்த மாளிகையாக மாறி சகல வசதிகளுடன் விளங்கியது. இதையெல்லாம் கண்டு வியந்து, பகவான் கருணையை எண்ணி தியானத்தில் இருந்த அவரை ஒரு லக்ஷ்மி போன்ற மங்கை எதிர்கொண்டு அழைக்க அவர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். தன்னை வரவேற்பவள் தன் மனைவி என்று தெரியவே சிறிது நேரம் ஆயிற்று. அப்போது அவர் மனதில் எண்ணினார், பகவான் பக்தர்கள் அளிப்பது குறைவாயினும், அதனைப் பெரிதாக எண்ணி அவர்களுக்கு நிறைவான செல்வத்தை அளிக்கிறார். அவர் அருளால் எனக்கு எல்லாப் பிறவிகளிலும் அவருடைய நட்பும், அவரிடம் இடையறாத பக்தி, அவர் சேவையில் மனம் லயித்து இருக்க வேண்டும் என்று எண்ணினார். குசேலர் இடைவிடாமல் பகவானைத் தியானம் செய்து, அகங்காரம், மமகாரம் நீக்கி, பற்றற்று பந்தபாசங்கள் விட்டு சத்புருஷர்களால் அடையப்பெறும் திவ்ய பதத்தை அடைந்தார்.

30. சுருதி கீதை

(ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீநாராயண மகரிஷியால் நாரத முனிவருக்கு உபதேசிக்கப்பட்டது சுருதி கீதை. அது விரிவானது. சிறப்புமிக்கது. எனவே, அதில் ஓர் அம்சமே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.) சுகமுனிவர் கிருஷ்ணர் சுருத தேவர்க்கும், பகுளேச்வரருக்கும் உபதேசித்து அனுக்கிரகம் செய்ததைக் கூறலானார். மிதிலா நகரத்தில் வாழ்ந்து வந்த சாந்தசீலரான சுருத தேவர் பற்றற்று, வைராக்கியமுடன், கிருஷ்ண பக்தியில் திளைத்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்து, நித்ய கர்மானுஷ்டனங்களைச் செய்து கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து வந்தார். அந்நாட்டு அரசனான பகுளேச்வரரும் கிருஷ்ண பக்தராய், பற்றின்றி அரசை ஆண்டு வந்தார். பகுளேச்வரரும், சுருததேவரும் பிரியமான தோழர்கள்.

ஒரு சமயம் அவ்விருவர்க்கும் அருள் புரியவேண்டி கிருஷ்ணன், நாரதர், வாமதேவர், வியாசர், அத்ரி, அருணர் முதலான முனிவர்களுடன் செல்ல, மேற்படி இருவரும் மக்கள் புடைசூழ பூஜா திரவியங்களைக் கைகளில் ஏந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். அவர்கள் இருவருக்கும் அனுக்கிரகம் செய்ய எண்ணிய பகவான் இரண்டு உருவங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் இல்லங்களில் தனித்தனியே பிரவேசித்தனர். தம்முடனேயே பகவான் இருப்பதாக எண்ணி இருவரும் மகிழ்ச்சி உற்றனர். அப்போது பகுளேச்வரர் பகவானைத் தனது கிரகத்தில் முனிவர்களுடன் தங்கியிருந்து புனிதப்படுத்துமாறு வேண்டித் துதி செய்தார். பகவானும் மிதிலாபுரி மக்களுக்கு மங்களத்தை அருளிக்கொண்டு சில காலம் அங்கேயே தங்கியிருந்தார்.

சுருத தேவரும் அதிதிகளை நன்முறையில் உபசரித்துப் போற்றி வணங்கி மெய்மறந்து ஆனந்தத்தில் நர்த்தனம் செய்தார். பகவத் சரணாம் ருதத்தை சிரசில் தரித்து ஆனந்தக்கண்ணீர் பெருக்கினார். அந்த மகான்களின் கூட்டுறவு பெரிய பாக்கியம் என எண்ணிப் பரசவமடைந்தார். அவர் கிருஷ்ணனிடம் கூறினார், ஹே! பரமபுருஷா! இணையற்ற மகிமை வாய்ந்த சத்திய சொரூபியாகிய தாங்கள் இந்த உலகைச் சிருஷ்டித்து, திவ்ய அதிதிகளுடன் அனைத்திலும் பிரவேசித்து பரவி இருப்பதைக் கண்டு தரிசித்து ஆனந்தமடைந்தேன். இன்று நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் என்றார். தாய் உள்ளம் கொண்ட பக்தர் இதயத்தொளிரும் தாங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உத்தர விடுங்கள் என்று கேட்டார். அப்போது பகவான் சுருத தேவரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: சுருததேவா! உமது பாத தூளிகளால் உலகைத் தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் சஞ்சரிக்கும் இந்த முனிசிரேஷ்டர்கள் உனக்கு அனுக்கிரகம் செய்யவே வந்திருக்கின்றனர். சாதுக்கள் தமது பார்வையால், உடனே தூய்மை ஆக்குகிறார்கள். தபஸ்வியாகவும், ஞானியாகவும் திருப்தி கொண்ட அந்தணர்களோ சாலச்சிறந்தவர்கள். அந்தணர்களை ஆதரிப்பவன் என்னையே ஆராதிப்பவனாகிறான். பிரம்மத்தை நிரூபணம் செய்கின்ற உப நிஷத்தார்கள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டவர்கள். பிரம்ம வித்தையை அறிந்து சரீர அபிமானத்தை விட்டு மோட்சத்தை அடைகிறார். இது குறித்து ஒரு சமயம் நாரத முனிவர்க்கும், நாராயண மகரிஷிக்கும் நடந்த சம்வாதத்தைக் கூறுகிறேன் என்றார்.

பிரளய காலத்தில் ஜகத் முழுவதையும் சக்திகளுடன் உபசம்ஹாரம் செய்து விட்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த பரமாத்மாவை பிரளயத்தின் முடிவில் சுருதிகள் பிரம்மத்தின் மகத்வங்களைக் குறிப்பிடுகின்ற வாக்கியங்களால் துதிப்பாடித் துயில் எழுப்புகின்றன. சில சமயம் பிரகிருதியுடன் சேர்ந்தும் மற்றும் சில சமயம் தன்னில் தானே ஆழ்ந்திருந்தும் பல லீலைகளைச் செய்கின்ற தங்களையே சுருதிகள் புகழ்ந்து பாடுகின்றன. சகல யோக மக்களின் பாபங்களை எல்லாம் நீக்கி அருள் செய்கின்ற பிரபு தாங்களே என்பதையும் அறிந்த ஞானிகள் தங்கள் திவ்ய கதாம்ருதக் கடலில் மூழ்கி மூன்றுவிதத் தாபங்களிலிருந்தும் விடுபடுகின்றார்கள். அருட்செல்வர்கள் தங்கள் சரண கமலங்களில் ரமிக்கின்ற ஹம்சங்கள் ஆகின்ற ஞானிகள் சத்சங்கத்திலேயே விருப்பமுள்ள அவர்கள் வீட்டைக் கூட துறந்துவிடுகிறார்கள்.

உமது சிருஷ்டியான இந்தப் பிரபஞ்சமும், உமது சத்தால் பரவியுள்ள ஜீவ சொரூபமும் பிரம்மமே. உங்களிடம் பக்தியுள்ள மகனீயர்கள் எல்லோரையும் தூய்மையாக்குகின்றனர். தாமும் மேன்மை அடைகின்றனர். பிறப்பற்றவர்களான பிரகிருதி, புருஷன் ஆகிய இருவர்களுக்கும் உற்பத்தி என்பதில்லை. பல நாம ரூபங்களை உடைய ஜீவர்கள் அவற்றை இழந்து பிரளய காலத்தில் உம்மிடத்திலேயே லயத்தை அடைகின்றனர். பரம்பொருளை உணரும் முயற்சியில், பிரம்ம நிஷ்டரான குருவின் அருள் மிகவும் அவசியம். மனதை அடக்கி பகவானிடம் செலுத்த சிறந்த குருவை நாடி நல்ல முறையில் உபாசித்து அவர் அருளைப் பெற வேண்டும். பகவத் சொரூபிகளாகிய பக்தர்கள் தங்களுடைய நற்செயல்களால் மக்களையும் தீர்த்தங்களையும் பரிசுத்தம் செய்யவே சஞ்சரிக்கின்றனர். தேஜஸ், ஐஸ்வர்யம், சத்தியம், பராக்கிரமம், ஞானம், வைராக்கியம் கொண்டு உம்மை ஆராதிப்பவனுக்கு மோக்ஷ சுகம் கிடைக்கின்றது.

இவ்வாறு ஆகாய வெளியில் சஞ்சரிப்பவர்களும், ஆதிகாலத்தில் தோன்றியவர்களுமான மகாத்மாக்களாகிற சனகாதி முனிவர்களால் சகல வேத, புராண உபநிஷத்துக்களின் சாரமானது திரட்டி அளிக்கப்பட்டது என்று நாரதமுனிவருக்கு நாராயண மகரிஷியால் கூறப்பட்டது. இதைக்கேட்டு தேவரிஷிமிக்க திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்தவராக நாராயண ரிஷியை வணங்கித் துதித்தார். சகல பிராணிகளின் பிறவிப் பிணியையும் போக்கி அருள் செய்யவே மனதைக் கவருகின்ற மங்கள வடிவங்களைத் தரிக்கின்ற பரிசுத்தமான கீர்த்தியையுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானை நமஸ்கரிக்கின்றேன் என்று துதித்து வணங்கி நாராயண ரிஷியிடம் விடைபெற்றுக் கொண்டு வியாசர் ஆசிரமத்துக்கும் சென்றார். பரப்பிரமம் குறிப்பிட முடியாத வஸ்துவாகவும், நிர்க்குணமாகவும் இருந்தபோதிலும் வேதங்களால் நிரூபணம் செய்யப்பட்டதென்பதை அறிவாயாக என்று கூறி பரபிரம்மத்தைத் துதி செய்து தியானிக்கலானார்.

31. நிருகனுக்கு அருள்புரிதல்

நிருகன் இக்ஷ்வாகுவின் மகன். தர்மவான், கொடையாளி. ஒரு சமயம் நிருகன் ஒரு பெரும் யாகம் செய்தான். அப்போது காசியபருக்கு பல பசுக்களைத் தானம் கொடுத்தான். அவற்றை முனிவர் ஓட்டிச் செல்கையில் அவற்றுள் ஒரு பசு தப்பி ஓடிவிட்டது. இது தானம் பெற்றவரோ, கொடுத்தவரோ மற்றவரோ அறியார். அப்பசு நிருகன் பசுக்கூட்டத்தில் கலந்துவிட்டது. சிலநாட்களுக்குப் பிறகு நிருகராஜன் வேறோர் அந்தணனுக்கு சில பசுக்களைத் தானம் செய்தான். அவற்றுள் ஏற்கனவே கச்யபருக்குக் கொடுத்துத் திரும்பி வந்த பசு கலந்திருந்ததை மன்னரோ, அந்தணரோ அறியார். அந்தணர் பசுக்களை ஓட்டிக்கொண்டு செல்கையில் காசியபர் அப்பசுக்கூட்டத்தில் தனது பசுக்களிலிருந்து பிரிந்துபோன பசு இருப்பதைக் கண்டு அந்தணனைக் கேட்க, அந்தணர் தனக்கு மன்னன் அளித்த பசுக்கள் அவை என்றார். பிறகு காசியபர் நிருகனிடம் சென்று எனக்களித்த பசுவை மறுபடியும் அந்தணர்க்கு எப்படி அளித்தாய் என்று கோபித்தார். அப்போது மன்னன் தனக்குத் தெரியாமல் நேர்ந்த தவறு அது என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். மேலும், அந்தப் பசுவிற்கு ஈடாக ஆயிரம் பசுக்கள் கொடுப்பதாகவும் சொன்னான். ஆனால், காசியபரோ அதே பசுதான் வேண்டும் என்றார்.

பின்னர் பசுக்களைத் தானம் பெற்ற அந்தணரை வேண்ட, அவரும் மறுத்து விட்டார். அப்போது காசியபர் நிருகனை இனி ஓணானைப் போல் நடக்காதே என்று கூறிச் சென்றார். நிருகன் மரணமடைந்த பின் யமனிடம் எடுத்துச் செல்லப்பட, இயமன் நிருகன் பல புண்ணியங்கள் செய்திருந்தபோதிலும் அறியாமல் செய்த பாவம் பசுவின் காரணமாக முனிவர் கோபத்திற்கு ஆளானது என்று கூறி முதலில் பாப பலனோ அல்லது ஸ்வர்க்கபோகமா எதை அனுபவிக்கப் போகிறாய் என்று கேட்டார். நிருகமகாராஜா சிறிய பாபப் பலனை முதலில் பெறுவதாகக் கூற ஓணானாக மாறி பூமியில் விழுந்தான். பின்னர் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தொட, பாப விமோசனம் பெற்று திவ்ய சரீரம் பெற்று சொர்க்கத்தை அடைந்தான் நிருக மகாராஜன்.

32. பலராமன் தீர்த்த யாத்திரை

பலராமன் யமுனை ஆற்றில் தீர்த்தமாடிய பின்னர், அடுத்து கங்கை மாநதி படிந்து யானையைப் போல் நடந்தான். பின்னர் நைமிசாரணியத்தை அடைந்தான். அங்கு வியாசருடைய மாணாக்கர் ரோமஹர்ஷணர் என்ற இயற்பெயரைக் கொண்ட சூதரைக் கொன்றான். புல்லின் நுனியையே ஆயுதமாகக் கொண்டு கொன்றான். இந்த ரோம ஹர்ஷணரே சூதபவுராணிகர் ஆவார். இவ்வாறு செய்த பலராமரிடம் நைமிசாரணிய முனிவர்கள் சூதனைக் கொன்றது தருமமல்ல. எனவே, உலக வழக்கப்படி பலராமனைப் பன்னிரண்டு மாதங்கள் புனித நீரை உடைய துறைகளில் நீராட வேண்டும் என்று கூறினர். இவ்வலன் என்றவன் மகன் வற்கலன் நைமிசாரணிய முனிவரைத் துன்புறுத்தி வந்தான். கொடியவனால் எல்லோரையும் வருத்துபவனைக் கொல்ல வேண்டுமென்றதற்கு இணங்கக் கொல்லப்பட்டான். அந்தச் சூதன் மகனே திரும்பவும் சூதபவுராணிகராய் பிறந்தான். பலராமனுக்கு கலப்பையையும், வைஜயந்தி பொற்றாமரை மாலையையும், பூணையும், கலையையும் அந்தணர் உதவினர்.

பலராமன் கவுசிகியாறு, பூந்துறையை உடைய சரயுநதி, பிரயாகை, கோமதி, கங்கை, சோணிதயாறு ஆகியவற்றில் நீராடி கயையைக் காணுதற்குச் சென்றான். திரிவேணி சங்கமத்தில் மூழ்கி பரசுராமனைத் தரிசித்துப் புறப்பட்டான். ஏழுவகைப் பிறவித் தோற்றம் கெட கோதாவரி, பெண்ணையாறு, பம்பா நதிகளில் நீராடி மகேந்திர மலையில் முருகனைக் கண்டு தமிழ்நாட்டை அடைந்தான். பின்னர் திருவேங்கட மலையிலுள்ள திருமாலைத் தரிசித்தான். அடுத்து காஞ்சி, திருவரங்கம் சென்று காவிரியில் நீராடினான். பின்னர், திருமாலிருஞ்சோலையை அடைந்தான். பின்பு மதுரை நகரை அடைந்து வைகையில் நீராடினான். அடுத்துக் கடலில் விளங்கும் சேதுவை அடைந்து நீராடினான். பின்னர், பொதியமலை கடந்து தாமிரபரணியாற்றில் நீராடினான். குமரியாற்றிலும் நீராடிவிட்டு துவாரகை வந்தடைந்து கிருஷ்ணனை வணங்கினான். சுகமுனிவர் பரீக்ஷித்திடம் கூறலானார்.

ஒரு சமயம் ராம, கிருஷ்ணர்கள் வசுதேவரை வணங்கி பணிவுடன் நின்றனர். மக்களின் மகிமைகளை மகரிஷிகளின் மூலம் அறிந்த வசுதேவர் அவர்களைப் புகழ்ந்து கொண்டாடினர். கிருஷ்ணா, சங்கர்ஷனா நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் முக்கிய புருஷர்கள். ஜீவனுக்கு மனிதப் பிறவி கிடைப்பதே அரிது. இருந்தும் உம்மைத் தியானம் பண்ணாமல் காலத்தை வீணாகக் கழித்துவிட்டேன். உமது சரணங்களையே தஞ்சமாக அடைகின்றேன். கிருபை கூர்ந்து என்னை ரக்ஷித்து அருள வேண்டும். அப்போது பகவான் வசுதேவரிடம், நீங்கள் கூறியவை உண்மையே. இந்த துவாரகாவாசிகள் அனைவரும், இந்தச் சராசரி பிரபஞ்சம் முழுவதும் பரப்பிரம்ம சொரூபம் என அறியவும், ஆத்மா என்பது ஒன்றே தான். அது அழிவற்றது. சுயம் பிரகாசமாக விளங்கும் நித்திய வஸ்து. குண சம்பந்தமற்றது என்றும் அறிய வேண்டும் என்று கூறினார். அப்போது அங்கு வந்த தேவகி கொல்லப்பட்ட குழந்தைகளை எண்ணி அழுதாள். பிறகு கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா, பலராமா நீங்கள் ஆதிபுருஷர்கள் என நானறிவேன். கம்சனால் கொல்லப்பட்ட என்னரும் குழந்தைகளைக் காண விரும்புகிறேன் என்றாள்.

பகவான் உடனே தனது யோக சக்தியினால் ஸுதலலோகம் சென்று பலி சக்கரவர்த்தியிடம் இருந்த அக்குழந்தைகளை அழைத்து வந்தார். தன் செல்வக்குழந்தைகளை தேவகி கண்டவுடனே அவர்களைத் தழுவிக் கொண்டு உச்சிமுகர்ந்து மிக்க இன்படைந்தாள். சிறிது நேரம் கழிந்ததும் அக்குழந்தைகள் எல்லோரையும் வணங்கி அவர்கள் எதிரிலேயே தேவலோகம் சென்று விட்டனர். இதைக்கண்ட தேவகி இது கிருஷ்ணனின் மாயையே என நினைத்து ஆச்சரியத்தினால் பிரமித்து நின்றாள். அழிவற்ற கீர்த்திவாய்ந்த அம்ருதமயமான அவருடைய திவ்ய சரித்திரமானது பாவங்களையும், தாபங்களையும் போக்கி விடுகிறது. பகவானுடைய கீர்த்தியாகிய தீர்த்தம் கங்கையை விட மேன்மையானது. ஸ்ரீகிருஷ்ண திவ்ய நாமங்களை உச்சரிப்பவர்களின் சகல பாவங்களும் நசித்து விடுகின்றன. பகவான் துவாரகையில் வசித்தபோது அனைவரும் பகவானைப் பக்தியுடன் ஆராதித்தனர். அங்கே வசித்துவந்த ஸ்திரீகள் ஸ்ரீகிருஷ்ணனிடம் தம் உள்ளத்தை அர்ப்பணம் செய்து விஷ்ணு பதத்தை அடைந்தனர்.

அப்பியாச யோகத்தினாலும் மனத்தைத் தன் லக்ஷ்யத்திலேயே நிலைநாட்ட வேண்டும். சர்ப்பமானது பிறர் அமைத்த வீட்டில் நுழைந்த ஜன சமூகத்திலிருந்து விலகி தனியாக வசிப்பதைப் போல் யோகி உலகத்தாருடன் சேராமல் ஒளிந்து வாழ வேண்டும். தேனீ சேகரிக்கும் தேனை மற்றவர் எடுத்து அனுபவிக்கிறார்கள். அதுபோல் தான் லோபியின் செல்வம் பிறருக்கே பயன்படும். தன் சுகத்திற்கும், பிறர் நலனுக்கும் உபயோகப்படுவது சிறப்புடையது. சிலந்திப் பூச்சி தன் வாயினால் உண்டாகும் நூலை பரப்பி விளையாடி பின்னர் தானே விழுங்கிவிடும். அதுபோலவே பகவானும் லீலா மாத்திரமாக இவ்வுலகைப் படைத்து முடிவில் அழித்து விடுகிறார். கூட்டில் அடைக்கப்பட்ட புழு குளவியையே எண்ணி, எண்ணி அதன் வடிவையே அடைகின்றது. சரீரம் பிறருடையது என்பதைத் தெரிந்து கொண்டு பற்றுதலை அகற்றி, அகங்காரமற்றவனாக, ஆத்ம சொரூபத்தில் நிலைபெற்ற மனத்துடன் இவ்வுலகில் சஞ்சரிப்பாள். இவ்வாறு இருபத்து நான்கு ஆசாரியர்களை ஆகிரயித்து அவதூதர் கற்றது பற்றி, தத்தாத்ரியேருடன் அளித்த உபதேசங்களை கேட்ட யது மகாராஜன் பற்றற்ற சித்தமுடையவராக வாழ்ந்து வந்தார் என்று பகவான் உத்தவ சுவாமிக்குச் சொன்னார்.

33. உத்தவர் ஐயம் தெளிதல்

ஸ்ரீகிருஷ்ண பகவான் மேலும் கூறினார், மோக்ஷத்தில் விருப்பமுள்ளவர்கள் காம்ய கர்மங்களை விடவேண்டும். என்னிடம் பக்தி உள்ளவன் காம்ய கர்மங்களை விட வேண்டும். ஞான மார்க்கத்தில் விருப்பமுடையவர்கள் நித்திய கர்ம விதிகளையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. என் பக்தன் நியமங்களை இடைவிடாமல் செய்ய வேண்டும். நியமங்களைக் கூடிய மட்டும் செய்ய வேண்டும். திறமை, நிதானம், அன்புள்ளம் உடையவனாக இருக்க வேண்டும். சத்விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவனாகவும், பிறர் நலனைக் கோருகின்றவனாகவும் இருக்க வேண்டும்.  சாந்தகுணமுள்ள குருவை என் வடிவமாகவே நினைத்து உபாசனை செய்ய வேண்டும். மனிதன் சுதந்திரம் அற்றவன். துன்பம் நீக்கி, சுகம் பெறும் உபாயத்தை அறிந்த ஜீவனால் மரணத்தை வெல்ல முடியும். குணங்களின் சம்பந்தங்கள் இருக்கும் வரையில் மனிதன் துன்பத்திற்கு ஆளாகி மோகத்தில் உழல்கிறான்.

அப்போது உத்தவர், ஒரே மனிதன் எப்படி நித்ய பக்தனாகவும், நித்ய முக்தனாகவும் இருக்க முடியும்? குணசம்பந்தம் உள்ள சரீரத்தை உடைய புருஷன் சுகதுக்கங்கள் இல்லாமல் எப்படி இருக்க முடியும் எனக்கேட்டார். அப்போது பகவான், குணங்கள் எனது மாயையின் மூலமே. ஆகையால் அதற்கு பந்தமோ, மோக்ஷமோ இல்லை. சோக, மோக, சுக துக்கங்களும், இச்சரீரமும் மாயையால் ஆனவையே ஆகும். ஆத்ம விஷயத்தில் உண்டாகிய மயக்கத்தை, எங்கும் நிறைந்த என்னிடம் நிர்மலமான மனத்தை அர்ப்பணம் செய்து சாந்தியைப் பெற வேண்டும். அவ்விதச் சக்தி அற்றவன் செயல்களைப் பற்று இன்றி செய்து அவற்றை எனக்கே சமர்ப்பணம் செய்ய வேண்டும். சாதுக்களுடைய உதவியால் எனது திவ்ய பதத்தைச் சுலபமாக அடைகின்றான். பலி, சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான், ஜடாயு, கஜேந்திரன், யஜ்ஞ பத்தினிகள், கோபியர் ஆகியோர் நன்மை அடைந்தது சாது சங்கத்தினாலேயே ஆகும்.

எனவே, நீயும் சர்வாத்ம சொரூபியாகிய என்னையே சர்வஹித பாவத்துடன் சரணடைவாயாக. அதனால் சகல பயமும் நீங்கி ÷க்ஷமத்தை அடைவாய். தனது சுத்தாத்ம சொரூபமே பரமாத்ம சொரூபம் என உணர்ந்து, வைராக்கியத்தைக் கடைபிடித்து தூரீயத்தில் நிலைபெற்று அபிமானத்தை விட்டுவிட வேண்டும். கர்ம வசத்தால் உண்டான இச்சரீரம் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என நினைக்கும் யோகி சமாதி யோகத்திலே நிலைபெற்று ஆத்ம சாக்ஷõத்காரத்தை அடைந்து ஆனந்தத்தைப் பெறுகிறான். என்னிடம் மனதை அர்ப்பணித்த பக்தனுக்கு ஒரு பிரம்ம பதவி, இந்திர பதவி, அணிமா சித்திகள், மோக்ஷம் கூட ஒரு பொருட்டல்ல. பற்றற்று, விரோதம் இன்றி சாந்தனாக எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கின்றவனுடைய பாத துளியை நான் அணிகின்றேன். பக்தி யோகத்தால் ஆத்மா கர்ம வாசனைகள் நீங்கி உண்மை சொரூபத்தை அடைகின்றது.

கிருஷ்ணா, முக்தி கோருபவன் உம்மை, எப்படி, எந்த வடிவில் தியானிக்க வேண்டும்! அந்தத் தியானமுறை பற்றி அறிய விரும்புகிறேன் என்று உத்தவர் கேட்டார். உத்தவ! சமமான ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து, கைகளை மடிமீது வைத்து, புருவ மத்தியில் பார்வையை நிலைநாட்டி, பூரக, கும்பக, ரேசகங்களால் பிராமணனுடைய வழியைத் தூய்மைப்படுத்தி, இந்திரியங்களை வெற்றிகொண்டவனாக இருக்க வேண்டும். பிரணவ நாதத்தை பிராண சக்தியின் மூலம் மேலே கொண்டு சென்று அங்கு நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகளும் பிரணவ ஜபத்துடன் பிராணாயமத்தைப் பத்து முறை செய்துவந்தால் ஒரு மாத காலத்தில் மனம் அடங்கும். அப்போது எட்டு இதழ்களும், கர்ணிகையும் கொண்ட இதயத் தாமரையை மேல்போர்த்தி மலர்ந்துள்ளதாக எண்ணி, அங்கே சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றை முறையே தியானித்து அக்னி நடுவில் தியானத்தால் உகந்ததான எனது எல்லா அவயங்களிலும் தனித்தனியே நிறுத்தி தியானிக்க வேண்டும். முடிவில் புன்சிரிப்புடன் கூடிய முகமண்டலத்தில் தியானிக்க வேண்டும். சித்தத்தை வேறு எதிலும் செலுத்தக்கூடாது.

தீவிரமான தியான யோகத்தினால் ஆத்மாவிடம் ஒன்றிப் போய்விட்ட யோகிக்கு காணப்படும் பொருள், காண்பவன் அறிவு (உணர்வு) என்ற வேற்றுமை மயக்கம் முழுவதும் விரைவில் அற்றுப் போய்விடும் என்றார் பகவான். அடுத்து, உத்தவரிடம் முன்பு குரு÷க்ஷத்திரத்தில் அர்ச்சுனனுக்கு கூறின விஷயங்களையே கூற ஆரம்பித்து விளக்கினார். எல்லா உயிரினங்களுக்கும் நானே ஆத்மா. எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி இருப்பவனும் நானே. இவ்வுலகை ஆக்கிக் காத்து, அழிப்பவனும் நானே. காலம், குணங்கள், புண்ணிய ஹிரண்யகர்ப்பனாக இருப்பவன் நானே. நாரதர், பிருகு, மனு, காமதேனு ஆகியவை எம் அம்சங்களே. எனது விபூதிகள் அல்லது மகிமைகளை கணக்கிட முடியாது என்றார்.

அவமானமும் வைராக்கியமும் ஒரு கதை

பின்னர் கொடூரமான சொற்களால் கலக்கமடைந்த மனத்தை ஒருவராலும் சமாதானம் செய்ய முடியாது என்று கூறிய பகவான், அது விஷயமாக ஒரு கதையைக் கூறினார். அவந்தி நாட்டில் ஒரு வேதியன் இருந்தான். அவன் தனவான். எனினும் கருமி, காமி. இதனால் அவனை அவன் மனைவி, உற்றார், உறவினர் அனைவரும் வெறுத்தனர். அறமும் அன்பும் இல்லாத அவன் மீது பஞ்சயக்ஞ தேவதைகளும் கோபம் கொண்டதால் அவன் செல்வம், தர்மம், இன்பம் அனைத்தும் இழந்து ஏழையானான். அவனை எல்லோரும் அவமதித்து அலக்ஷ்யம் செய்தனர். அவனால் அவற்றைச் சகித்துக் கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினான். அப்போது அவனுக்குத் தீவிரமான வைராக்கியம் உண்டாயிற்று. லோபிக்குச் சுகமில்லை. பணத்தாலேயே எல்லா ஆனந்தங்களும் உண்டாகின்றன. எனவே, பணத்தாசை கூடாது. செல்வமிருந்தும் அதனை உற்றார் உறவினர், ரிஷிகள், தேவர்கள் என்ற உரிமை உடையவர்களை ஆராதிக்கவில்லை. அதனாலே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. கருணையுள்ள பகவானால் இப்போது வைராக்கியம் ஏற்பட்டுள்ளது. இனி நற்செல்வங்கள் செய்து, உடலை வாட்டி, தவவாழ்வை மேற்கொள்ளுவேன் என்று நிச்சயித்து அகங்காரம் அகற்றி, சாந்தனாகி துறவறத்தை மேற்கொண்டார்.

அழுக்கான உடல், கந்தல் துணியுடன் காட்சி அளித்த அத்துறவியை அனைவரும் பரிகசித்தனர். கைகொட்டி நகைத்தனர். அடித்து நிந்தித்தனர். ஆனால், அத்துறவி கோபமோ, வருத்தமோ இன்றிப் பொறுமையுடன் இருந்தான். மனதை அடக்கியவனே வெற்றி கண்டவன். பிரகிருதிக்கு அப்பாற்பட்ட ஆத்மாவுக்கு எதனாலும், எப்போதும் எவ்விதமாகவும் சுகதுக்கங்கள் உண்டாவதில்லை. இதை அறிந்த விவேகி யாரிடமும் அகங்கொள்ள மாட்டான். இனி நான் பரமாத்ம நிஷ்டையைப் பெற்று ஸ்ரீமுகுந்தனின் சரண சேவையினாலேயே சம்சாரத்தைக் கடக்கப் போகிறேன் என்று நிச்சயித்த அத்துறவி வைராக்கியத்துடன் உலகில் சஞ்சரித்தான். நண்பன், விரோதி என்பதும், சம்ஸாரத் தொல்லையும் அஞ்ஞானத்தின் விளைவு என அறிந்தான்.

முக்குணங்கள்

முக்குணங்கள் ஆவன ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகும் என்றும் அவற்றின் தன்மைகளையும் பகவான் உத்தவருக்குக் கூறினார். பரிசுத்த சத்வகுணமே என்னை அறியக்கூடியது. ஆத்மாவை அறிய வேண்டுமென்ற ஆவல் சாத்வீகம், செயல்களினால் ஆசை ரஜோகுணம், அதர்மத்தில் விருப்பம் தாமசம். என்னை சேவிப்பதில் சிரத்தை நிர்க்குணம். எனவே சித்தத்தில் தோன்றுகின்ற இந்த குணங்களை வெற்றிகொண்டு என்னை யோகத்தால், சிரத்தை கொண்டு உபாசித்துத் தியானிப்பவனே என்னை அடையத் தகுதி உடையவனாவான். உத்தவர், அச்சுதா ஞானயோகம் அனுஷ்டிக்க முடியாதவன் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, பகவான், மனத்தை என்னிடம் அர்ப்பணித்து எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்ய வேண்டும். எனது பக்தர்களின் செயல்களைப் பின்பற்ற வேண்டும். ஆகாயம் போல உள்ளும் வெளியும் எங்கும் வியாபித்துள்ள ஆத்மாவாகிய என்னையே எல்லாப் பொருள்களிலும் தன்னிடத்திலும் தெளிந்த மனத்துடன் பார்க்க வேண்டும்.

இந்தப் பரிசுத்தமான உபதேசங்களை ஒவ்வொரு நாளும் உரக்கப் படிக்கின்றவன் ஞானமாகிற தீபஒளியில் என்னைத் தரிசித்துப் பரிசுத்தமடைவான். அமைதியாக இருந்து சிரத்தையுடன் கேட்கும் பக்தனுக்குக் கர்ம பந்தங்கள் விலகி விடும். ஞானத்தை நாடுகின்றவன் இதை அறிந்துகொண்டால் வேறு எதையுமே அறிய வேண்டியதில்லை. எவன் என்னிடமே தனது ஆத்மாவை சமர்ப்பணம் செய்கின்றானோ அப்போதே அவன் எனது அன்புக்குரியவனாகிறான். அவனே எனது சொரூபத்தை அடையத் தகுதி உள்ளவனாகிறான் என்ற பகவானுடைய இனிய வசனங்களைக் கேட்ட உத்தவர், அன்பினால் குரல் தழுதழுக்கப் பேசமுடியாமல் மவுனத்துடன் கைகூப்பி நின்றார்.

34. பகவான் கட்டளை

உத்தவர் கிருஷ்ணனைப் பார்த்து, இந்தச் சிறப்புக் காரியம் நிறைவேறும் பொருட்டு உற்றார் உறவினர்களிடம் உறுதியான பாசத்தை நீரே உமது மாயையால் உண்டாக்கினீர். இப்போது ஆத்ம ஞானமாகிய சுத்தியினால் அதை நீரே துண்டித்துவிட்டீர். ஹே! கிருஷ்ணா! உமது சரணார விந்தங்களில் நீங்காத பக்தி ஏற்பட அருள்புரிவீராக! சரணாகதனாக எனக்கு எதைச் செய்ய வேண்டுமோ அதைக் கட்டளையிடுங்கள் என்று வேண்ட, பகவான் சொன்னார், உத்தவ! நீ உடனே பதரிகாசிரமம் சென்று, பாததீர்த்தமாகிய கங்கையில் நீராடி, ஆசமனம் செய்து பரிசுத்தமடைவாயாக. அலகநந்தா நதியைத் தரிசிப்பதாலேயே சகல பாவங்களும் நீங்கி விடும். பிறகு மரவுரி தரித்து, சுகத்தில் ஆசையின்றி, கிடைத்ததை உண்டு, வெப்பதட்சம் சகித்து, இந்திரியங்களை வென்று ஒழுக்கத்துடன், ஞான விஞ்ஞான அறிவுடன் சாந்தனாக இருந்து, மனதை அடக்கி, திரிகரணங்களையும் என் மீதே வைத்து, பாகவத தர்மத்தில் நிலைபெற்று, முக்குண வழிகளையும் கடந்து என்னையே வந்தடைவாயாக எனக் கட்டளையிட்டார்.

உடனே உத்தவர் புறப்படும் சமயத்தில் மனம் கசிந்துருகி பகவானை மும்முறை வலம் வந்து அவரது பாதங்களில் தலையை வைத்து கண்ணீரால் நனைத்தார். அப்போது பகவான் அவருக்குத் தனது பாதுகைகளை அன்புடன் அளித்தார். அவற்றை சிரசில் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் வணங்கி புறப்பட்டுச் சென்றார். பிறகு பதரிகாசிரமம் சென்று, ஸ்ரீகிருஷ்ணனை இதய பீடத்தில் நிலைபெறச் செய்து தியானித்து அவருடைய உபதேசங்களை அனுஷ்டித்துத் தவம் செய்து லோக பந்துவாகிய ஸ்ரீஹரியினுடைய உத்தம பதத்தை அடைந்தார். யோகீஸ்வரர்களால் சேவிக்கப்படும் சரணங்களை உடைய ஸ்ரீகிருஷ்ணனால் உத்தவருக்கு உபதேசிக்கப்பட்ட பகவத் பக்தி மார்க்கம் என்ற இந்த ஞானானந்த மார்க்கத்தை ஒருவன் சிரத்தையுடன் சிறிதளவு உட்கொண்டாலும் முக்தியை அடைந்து இவ்வுலக மக்களையும் விடுவிக்கின்றான் என்று சுகமுனிவர் கூறி மனம் உருகிப் பகவான் கிருஷ்ணனைத் துதி செய்தார். வேதங்களை வெளியிட்ட பகவான், சம்சார பயத்தைப் போக்கிட, தேனைச் சேகரிக்கும் வண்டு போல, வேத சாரமான ஞான, விஞ்ஞான அமிர்தத்தைத் திரட்டித் தனது பக்தர்களுக்குப் புகட்டினார். அந்த மகிமை பொருந்திய ஆதிபுருஷராகிய கிருஷ்ணன் என்ற பெயருள்ள புரு÷ஷாத்தமனை நான் வணங்குகிறேன் என்று கூறி வணங்கினார் சுகமுனிவர்.

35. இரும்புலக்கை தோற்றம்

பகவான் பிராம்மண சாபத்தைக் காரணமாகக் காட்டி, யாதவர் குலத்தை அழிக்க எண்ணினான். பகவான், விசுவாமித்திரர், பிருகு, அஸிதர், துர்வாசர் முதலிய முனிவர்களைப் பிண்டாசாக ÷க்ஷத்திரத்திற்குச் சென்று வசிக்குமாறு கட்டளையிட்டார். அதன்படி அவர்கள் அங்கு சென்றடைந்து வசிக்கலாயினர். ஒரு சமயம் யாதவச் சிறுவர்கள் ஜாம்பவதியின் குமாரன் சாம்பவனுக்கு பெண் வேஷம் போட்டு மகரிஷிகளிடம் சென்று இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? அல்லது பெண் குழந்தையா? என்று பணிவுடன்-ஆனால் விளையாட்டாக கேட்க, கோபம் கொண்ட முனிவர்கள் அவர்கள் குலத்தை நாசமாக்கும் உலக்கை பிறக்கும் என்று கூறினர். அவ்வாறே சாம்பன் வயிற்றில் ஓர் உலக்கை தோன்றிட, அவர்கள் உக்கிரசேன மன்னரிடம் சென்று நிகழ்ந்ததை எல்லாம் கூறினர். உக்கிரசேனர் அவர்களிடம் அதனைப் பொடி செய்து கடலில் போட்டுவிடும்படி கூறிட, அவர்களும் அவ்வாறே செய்தனர். மீதி இருந்த துண்டுகளையும் கடலுக்குள் வீசினர். இரும்புத்துண்டுகளை விழுங்கிய மீன் வலையில் சிக்கியது. அதனை அறுத்த வலைஞன் இரும்புத்துண்டை எடுத்து ஒரு வேடனிடம் கொடுக்க, வேடன் அதனைத் தனது அம்பின் நுனியில் பொருத்தி வைத்தான்.

காலச் சொரூபியாகிய பகவான் பிரம்மனின் சாபத்தை மாற்றியமைக்க சக்தியுள்ளவர் என்றாலும் அதை அவர் மாற்ற விரும்பவில்லை. இது இப்படி இருக்க, ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணனை உபாசிக்க விரும்பிய நாரத முனிவர் அவருடன் துவாரகையிலேயே வசித்து வந்தார். அப்போது ஒருநாள் வசுதேவர் நாரதரிடம், வீடு உறுதிறலைக் கூறி அருளுமாறு கேட்டார். அப்போது நாரதர் கீழ்க்கண்டவாறு கூறலுற்றார். திருமாலிடம் அன்பு செலுத்தி அவனுடைய திருவடிகளை வணங்குபவர் பாகவதர் ஆவர். சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்றவாறு சாராம்சம் யாவும் அவனே என்ற உள்ளம் படைத்தவன் உத்தம பாகவதர். துளவோன் விதிவுற்ற உருக்களில் மாத்திரம் உறைகின்றான் என்று தொழுபவர் பிராகிருதர். இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவனும் யான் எனது எனும் பற்றற்ற நிலையில் இருப்பவர்களும் உத்தம பாகவதர்களே. அவர்கள் பிரம்மத்துடன் வேறுபாட்டை அடையமாட்டார். உலகுண்ட முதல்வனையே அன்பினால் தொழுது தூய தொழில்புரிவோர் ஒரு பழுதுமின்றி பயன்பெறுவார். திருமால் எங்கும் எதிலும் விராட்சொரூபனாகி, முத்தொழில் புரிகிறான்.

36. தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளல்

உத்தவர் வனம் சென்ற பிறகு துவாரகையில் நடந்தவற்றைச் சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறினார். அதன் பிறகு பகவான் துவாரகையில் தோன்றிய அபசகுனங்களைக் கண்டு சபையோரைப் பார்த்து, யது சிரேஷ்டர்களே! இந்த அபசகுனங்கள் மரண பயத்தைக் காட்டுகின்றன. இனி நாம் இங்கு இருக்கக் கூடாது. பெண்டிர், முதியோர், குழந்தைகள் உடனே சங்கத்வாரம் செல்லட்டும். இப்போதே அந்த பிரபாச ÷க்ஷத்திரத்திற்குப் புறப்படலாம். அங்கு சென்று தேவதைகளை ஆராதிப்பதால் துன்பங்கள் நீங்கி நலம் ஏற்படும். நாம் நீங்கியவுடன் துவாரகையைச் சமுத்திரம் கொள்ளும். ஆனால், நம் திருமாளிகை மட்டும் மூழ்காது. அதில் நாம், அடியாருக்கு நன்மை புரிய சாந்நித்யமாக இருப்போம் என்றார். எல்லோரும் உடனே புறப்பட்டு பிரபாசதீர்த்தத்தை அடைந்தனர்.

ஒருநாள் யாதவர்கள் தெய்வ கதியால் விசேஷமாக மது உண்டு அந்த மது வெறியால் அறிவிழந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கலகம் செய்தனர். அந்தக் கலகம் ஆயுதப் போராகவும் மாறியது. ஆயுதங்கள் அழிந்துவிட கடற்கரையில் முளைத்திருந்த கோரைப் புற்களைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் தாக்கினர். இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவரைப் பகவான் தடுத்தபோதிலும் அவர்கள் பகவானையே தாக்க முற்பட்டனர். எனவே கண்ணனும் ஒரு பிடி கோரைப் புற்களைப் பிடிங்கிக் கொண்டு இரும்பு உலக்கை போன்ற அதனாலேயே அனைவரையும் சங்கரிக்க யாதவர்கள் குலநாசம் அடைந்தனர். கண்ணனது திருத்தேர், சாரதியான தாருகன் பார்த்துக் கொண்டிருந்தபோதே குதிரைகளால் சமுத்திரத்தின் நடுவே இழுத்துச் செல்லப்பட்டது. அவ்வாறே பகவானின் சங்கு, சக்கர, கட்க, கதை, சாரங்கம் என்னும் பஞ்சாயுதங்களும் கண்ணனை வலம்வந்து சூர்யமார்க்கமாய் போய்விட்டன.

மீதி இருந்த மூவர் கிருஷ்ணர், தாருகன், பலராமன் மட்டும். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பலராமனின் திருமுகத்திலிருந்து ஒரு சர்ப்பம் ஒளியுடன் புறப்பட்டது. அந்த நாகம் நாகர்கள் துதி செய்ய, சமுத்திர ராஜன் வரவேற்க நீரில் புகுந்து விட்டது. அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தாருகனைப் பார்த்து தலைநகரம் சென்று யாதவர்கள் அழிந்ததையும், பல தேவர் தன்னைச் சோதிக்கு எழுந்தருளியதையும் வசுதேவர், உக்கிரசேனரிடம் சொல்லும்படிப் பணிந்து அனுப்பினார். மேலும் தானும் யோக நிஷ்டையில் உயிர்விடப் போவதையும், துவாரகையும் கடலில் மூழ்கடிக்கப் போகிறதென்றும், அனைவரும் அருச்சுனன் வந்ததும் அவனுடன் போக வேண்டும். யாரும் துவாரகையில் இருக்கவேண்டாம் என்றும் சொல்லச் சொன்னார். அப்படியே அஸ்தினாபுரத்திலிருந்து அருச்சுனனை அழைத்து வந்து அனைவரையும் காப்பாற்றச் சொல்லி நீயும் உடன் செல்வாயாக என்றார். எஞ்சிய யாதவர்க்கு வஜ்ரனை அரசனாக முடிசூட்டுமாறு கூறினார். அவ்வாறே தாருகன் செய்து முடித்தான்.

பின்னர் ஸ்ரீகிருஷ்ண பகவான் வசுதேவ ஸ்வரூபமான பிரமம் தான்தான் என்று சகல பிரபஞ்ச அதீதமான தன் சொரூபத்தில் நின்று அங்கே அரசமரத்தினடியில் மவுனியாக அமர்ந்திருந்தார். துர்வாசர் முதலிய முனிவர்களின் கூற்றுப்படி ஒரு முழந்தாளின் மீது மற்றொரு திருவடியை வைத்து யோக நித்திரையிலாழ்ந்தார். அப்போது கடலிலிருந்து கிடைத்த உலக்கையின் துண்டை தன் அம்புக்கு முன்னாக வைத்துக் கொண்டிருந்த வேடன் அங்கே வந்தவன் எம்பெருமானின் திருவடியை ஒரு மிருகமாக எண்ணி திருத்தாளின் அடிப்புறத்தில் எய்ய, அங்கு நான்கு புஜங்களுடன் பிரகாசமாய் தோன்றிய ஒரு புருஷனைக் கண்டான். உடனே அவரருகில் ஓடோடிவந்து தன்னிடம் சமர்ப்பித்து அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள பிரார்த்தித்தான். அதைக்கேட்டு பகவான் அவனை அஞ்சேல் என்று கூறி யாவும் தன் விருப்பப்படியே நடந்தது என்றும், அதனால் அவனுக்குப் பாதகம் எதுவும் ஏற்படாது என்றும், அவன் அப்போதே புண்யலோகம் செல்வான் என்றும் அருளினார்.

பிறகு கண்ணபிரான் அவ்யயமாயும், அசிந்த்யமாயும், வாசுதேவ ஸ்வரூபமாயும், மலமற்றதாயும், பிறப்பிறப்பு இல்லாத தாயும், அழைத்தற்கரியதாயும், ஸர்வாத்மகமாயும், இருக்கிற தன்னிடத்திலேயே தன் மனத்தைச் செலுத்தி, முக்குண கதியைக் கடந்து அன்றுவரை கொண்டிருந்த மனுஷ்ய சரீரத்தை விட்டருளினார். அருச்சுனன் ஸ்ரீகிருஷ்ண, பலராமர்களுடைய திருமேனிகளைத் தேடி எடுத்து ஈமக்கிரியைகளைச் செய்தான். ருக்மிணியும் மற்ற பட்ட மகிஷிகளும் அக்கினிப் பிரவேசம் செய்தனர். பலராமர் திருமேனியுடன் ரேவதியும் தீக்குளித்தாள். இஃதறிந்த தேவகி, வசுதேவர், ரோகிணி ஆகியோரும் தீக்குளித்தனர். யாவருக்கும் நீத்தார் கடன்களை ஆற்றி அருச்சுனன் துவாரகை சென்று வச்சிரனையும், மற்றும் கிருஷ்ணதேவிமார்களையும் அழைத்துக் கொண்டு பிறகு வந்து சேர்ந்தான். பகவானுக்குப் பிறகு அவரது சுதர்மை என்ற தேவசபையும், பாரிஜாதகத்தருவும் தேவலோகம் போய்ச் சேர்ந்தன. கிருஷ்ணன் மறைந்தவுடன் கலி புகுந்தான்.

துவாரகை கடலில் மூழ்கியது. பகவானின் திருமாளிகை தவிர மற்ற அனைத்தும் மூழ்கின. துவாரகை ஒரு புண்ணிய தலம். அதன் தரிசனமே சகல பாவங்களையும் நாசமாக்கும். அருச்சுனன் துவாரகாவாசிகளைப் பஞ்சந்தம் என்ற நாட்டில் தங்க வைத்திருந்தான். அருச்சுனன் தனியனாய் ஆயிரம் பெண்டிர்களை அழைத்துக் கொண்டு போவதைக் கண்ட திருடர்கள் பொருள்களையும், பெண்களையும் கவர்ந்து சென்றனர்; அருச்சுனன் தனது காண்டீபத்தை வைத்து நாண் பூட்ட முயற்சி செய்து அது பலிக்கவில்லை. அருச்சுனனால் போரில் ஒன்றும் செய்யமுடியவில்லை. அக்கினி பகவான் அஸ்திரத்திலிருந்த அக்ஷர தூணிரங்கள் காலி ஆயின. சகலவித இடையூறுகளும் அவனுக்கு நேர்ந்தன. அப்போது அவன், ஸ்ரீகிருஷ்ணன் தன் சக்தியைக் கொண்டுபோய் விட்டாரே. முன்பு வெற்றிகள் குவித்த அதே கைகள், அதே இடம், அதே அருச்சுனன்....புண்ணிய சொரூபியாகிய பகவான் கிருஷ்ணன் இல்லாமல் எல்லாம் வீணே. தெய்வம் வலியது என்று வருந்தினான்.

பின்னர் வேத வியாசரை வழியில் கண்டு தரிசிக்க, அவர் அவனது அவல நிலைக்கான காரணம் கேட்க, அருச்சுனன் நிகழ்வுகள் பற்றிக் கூறினான். மேலும் எனது பலம், தேஜஸ், வீரியம், பராக்கிரமம், சம்பத்து அனைத்துமாக இருந்த பகவான் எங்களை விட்டுவிட்டு மறைந்துபோனார். அடியேன் தனியனாய் ஒளியிழந்து காணப்படுகிறேன். இருந்தும் நான் இன்னும் உயிருடன் இருப்பதே வியப்பாக உள்ளது என்று பரிதாபமாகக் கூறி வருத்தமுற்றான். வியாசர் அவனுக்கு ஆறுதல் கூறினார். சகல பூதங்களுக்கும் இப்படிப்பட்ட காலகதி ஏற்படும். காலமே தோற்றத்துக்கும் அழிவுக்கும் காரணம். எல்லாம் காலத்திற்குள் ஆதினப்பட்டவை. பகவான் கிருஷ்ணனே அந்தக் காலச் சொரூபி. கண்ணனுடைய மகிமையாக நீ கண்டவை எல்லாம் அத்தன்மையினவே. அதில் ஐயம் ஏதுமில்லை. பகவான் அவதரித்த காரியம் அனைத்தும் நிறைவேறியது. எனவே அவர் தன் சோதிக்கு எழுந்தருளினார். பகவான் படைப்புக் காலத்தில் படைப்பும், ஸ்திதி காலத்தில் ஸ்திதியும் செய்தது போலவே சங்கார காலத்தில் அதையும் செய்தார். அனைத்தும் அவன் திருவிளையாடல்களே ஆகும். பகவான் திருவுள்ளம் பற்றிய மங்கையரை அற்பர்கள் இழுத்துச் சென்றதற்குக் காரணம் உண்டு. ஆனால், அவர்கள் கற்புக்கு பங்கம் ஏதும் ஏற்படாது.

முன்னொரு காலத்தில் அஷ்டவர்க்கிரர் (எட்டுக்கோணல் உடையவர்) என்ற முனிவர் கழுத்தளவு நீரில் அமிழ்ந்து பல ஆண்டு காலம் பிரம்மத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். தேவாசுரர் போரில் வெற்றி பெற்ற தேவர்கள் மேருமலைச் சாரலில் ஒரு விழா எடுத்தனர். அப்போது தேவமாதர்களாகிய ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் முனிவரைக் கண்டு வணங்கிப் புகழ்ந்து துதித்தனர். பெண்கள் வணங்கியது கண்டு பெருமகிழ்ச்சி கொண்ட முனிவர் நீங்கள் வேண்டும் வரம் யாது? என்று வினவ, அப்பெண்கள் புரு÷ஷாத்தமனே எங்களுக்குக் கணவனாக வர வேண்டும் என வேண்டினர். அவரும் அப்படியே ஆகுக என்று வரமளித்தார். பின்னர் அவர் நீரிலிருந்து வெளியில் வர அவரது கோணல் உடலைக் கண்ட தேவ மாதர்கள் சிரித்து விட்டனர். அப்போது முனிவர் தான் அளித்த வரத்தின்படி அவர்கள் பகவானின் மனைவிகள் ஆனார்கள். இறுதியில் திருடர்கள் வசப்படுவீர்கள் என்றார். அதன் பலனே இது. மறுபடியும் பெண்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோர, எனினும் சொர்க்கம் அடைவீர்கள் என்று கூறினார். யாவும் எம்பெருமானாலேயே நிச்சயிக்கப்பட்டு நடந்தேறின என்று கூறினார். அருச்சுனன் அஸ்தினாபுரம் அடைந்து நிகழ்ந்ததைச் சகோதரர்களிடம் கூறி வியாசர் வாக்குப்படி நடக்குமாறு கூற, பாண்டவர்கள் பரீக்ஷித்துக்கு குரு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்து உடனே வனத்திற்குச் சென்றனர்.

கிருஷ்ணாவதாரம் முடிவுற்றது.

 
மேலும் பாகவத புராணம் »
temple news
1. தோற்றுவாய்: ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சொல்லப்பட்ட பகவானுடைய சரித்திரம் ஸ்ரீமத் ... மேலும்
 
temple news
16. நான்காவது ஸ்கந்தம் : துருவன் கதை (இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உள்ளது) துருவன் நற்பதம் பெற்றிட ... மேலும்
 
temple news
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்: 1. தோற்றுவாய் (இது ஸ்ரீவிஷ்ணு புராணம் ஐந்தாவது அமிசத்திலும், ஸ்ரீமத் பாகவத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar