ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சிவகோரியில் உள்ளது ஒரு அற்புதத் திருக்கோயில். மிகப்பெரிய மலையினைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த குகைக் கோயிலை, பலநூறு ஆண்டுகளுக்கு முன், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துச் சொன்னானாம். மலை ஜாதியினரே இப்பகுதியில் அதிகம் வசிக்கின்றனர். அமர்நாத் சிவாலயத்திற்கு அடுத்த பெருமை உடையதாகச் சொல்லப்படுகிறது இவ்வாலயம். சிவகோரி குகைக் கோயிலுக்குச் செல்ல சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் குகைப்பாதையில் செல்ல வேண்டும். அதுவும் ஏதோ நேராகச் சென்று தரிசித்துவிட முடியாது. ஒரு ஆள் மட்டுமே நுழையக்கூடிய இடுக்கு வழியில் சென்றால், அடுத்து வரும் குகைப்பாதையில் கீழே படுத்தபடி தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டும். இப்படிச் சென்றால் வழியில் ஒரு நீரூற்று காணப்படும். அந்த நீரூற்றின் கீழ் நான்கு அடி உயரமுள்ள சுயம்பு லிங்கம் காட்சிதருகிறது. அருகே சென்றால், பக்தர்களிடமுள்ள மலர்கள், மாலைகள், இதர பொருட்களை சாது ஒருவர் வாங்கி ஈசனுக்கு சாத்துகிறார். பின்னர் ஒரு செம்பில் நிரூற்று நீரை எடுத்து, பக்தர்களிடம் தருகிறார். அதனை வாங்கி பக்தர்கள் தங்கள் மனமும் சிவபிரானின் லிங்கத்திருமேனியும் குளிர அபிஷேகம் செய்கிறார்கள். அந்த சமயத்தில் அங்கே ஒலிக்கும் உடுக்கை ஒலி எதிரொலித்தது பக்தி அதிர்வினை நம்முள் நிறைக்கிறது. அய்யனை தரிசித்த பின் அம்மை பார்வதியையும், இதர தெய்வங்களையும் தரிசித்து திரும்பலாம். வெளிச்சம் குறைவான குகைக்குள் காட்சிதந்தாலும் இந்த ஈஸ்வரனை தரிசிப்பது நமக்கு மட்டுமன்றி ஏழேழு தலைமுறைக்கும் பிரகாசமான வாழ்வளிக்கும் என நம்புகிறார்கள் பக்தர்கள். மகா சிவராத்திரி சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே வருவதே அதற்கு சாட்சி.