ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த முளைப்பாரி ஊர்வலத்திற்கு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்துவருகிறது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊரணியில் கரைக்க ஊர்வலமாக புறப்பட்டது. முளைப்பாரி ஊர்வலத்திற்கு சின்னக்கடை முஸ்லிம் வாலிபர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவேற்பளித்தனர். கோயில், விழாக்குழு நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். முஸ்லிம் வாலிபர் சங்க நிர்வாகி முகமது நிஷார் கூறியதாவது: புளிக்காரத்தெரு அம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் சின்னக்கடை முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக பங்கேற்று மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இருந்தோம். இடைப்பட்ட ஆண்டுகளில் பங்கேற்க தவறினோம். இந்நிலையில் சின்னக்கடை முஸ்லிம் வாலிபர்கள், முளைப்பாரி விழாவில் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்தை பேணுவதுதென தீர்மானித்தோம். இதன்படி முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்றோம். இந்நிகழ்ச்சி எங்களுக்கு மன நெகிழ்ச்சி அளித்தது, என்றார்.