மடை மடையாக தண்ணீர் பாய்வதைப் பார்த்திருக்கிறோம். பால் மடை மடையாகப் பாய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தத் தலம் உதயநேரி. ஒரு சமயம் ஆபஸ்தம்பர் என்ற முனிவர் பெருமாளை நோக்கி கடுந்தவம் புரிய, அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தாராம். அப்போது வானத்திலிருந்து பால் மடை மடையாக அந்தக் கிராமத்தில் பாய்ந்ததாம். தேவர்கள் அனுப்பிய பால், பெருமான் திருமஞ்சனத்திற்காக. அதனால் அந்த கிராமத்திற்கு பாலமடை எனப் பெயர் வந்ததாக தாமிரபரணி மாஹாத்மியம் கூறுகிறது. அக்காலத்தில் பாலமடை என்று அழைக்கப்பட்ட இக்கிராமத்தில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் வேங்கடாசலபதி உத்ஸவர் ஸ்ரீனிவாசர். தாயார் அலர்மேல் மங்கை. பாண்டிய மன்னன் உதயணன் என்பவன் இந்த கோயிலுக்கு நிறைய நிலங்கள் எழுதி வைத்தானாம். அதனால் இந்த ஊர் உதயணநேரி என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி உதயநேரி என்று ஆயிற்றாம். குலசேகர பாண்டிய மன்னனின் நோயினை இந்தப் பெருமாள் தீர்த்து வைத்ததால் இந்த பெருமாளுக்கு இடர் தீர்த்த பெருமாள் எனப் பெயரிட்டு அழைத்தான் எனக்கூறுவர். திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் இந்தத் தலம் உள்ளது.