பதிவு செய்த நாள்
23
டிச
2011
10:12
நகரி : திருப்பதியில் லட்டு, வடை போன்ற பிரசாதங்களின் எண்ணிக்கையை, கணினியில் பதிவு செய்த பின், விற்பனை செய்யும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் அமல்படுத்தியது. வெங்கடேச பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்ய, பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்களுக்கு, கல்யாண உற்சவ சேவைக்கு பின், பிரசாதமாக பெரிய லட்டுகள், வடைகள் வழங்கப்படுகின்றன. இந்த லட்டுகள், தேவஸ்தான அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொள்ளாத பக்தர்களுக்கும், ஒரு லட்டு நூறு ரூபாய் விலையில், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கல்யாண உற்சவ லட்டு பிரசாதம், வடை போன்றவை, முறைகேடாக வழங்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்பதாகவும் புகார்கள் வந்தன. லட்டு விற்பனையில் முறைகேடுகளை தவிர்க்க, லட்டு தயார் செய்யும் பிரிவு முழுவதையும், கணினியில் பதிவு செய்ய, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர். இதையடுத்து, கல்யாண உற்சவ பிரசாதங்களை வாங்குபவர், லட்டுகளை வழங்க சிபாரிசு செய்த அதிகாரி, தேதி, அவற்றின் எண்ணிக்கை விவரங்களை கணினியில் பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை நாள் ஒன்றுக்கு, 1,500 வரை விற்ற கல்யாண உற்சவ லட்டுகள், தற்போது, 620 ஆகவும், 1,400 விற்கப்பட்ட வடைகள், 550 வரை குறைந்து விட்டதாகவும், தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.