பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
11:07
திருச்சி, உற்சவர் நம்பெருமாளை மாற்றுவது இயலாத காரியம் என்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நம்பெருமாள் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், புகார் தெரிவித்திருந்தார். இது பற்றிய செய்திகள், வாட்ஸ் ஆப்பில் பரவியதால், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தினர், புகார்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது. இதில், எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்தனர்.
நேற்று, ரங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், புகாருக்கு விளக்கம் அளித்தனர்.இது குறித்து, தலைமை அர்ச்சகர் முரளி பட்டர் கூறியதாவது:நம்பெருமாள் விக்ரகம் மாற்றப்பட்டதாகவும், புருேஷாத்தம பெருமாள் காணவில்லை என்றும், மூலஸ்தானத்தில் உள்ள சாலிக்கிராமங்களை எடுத்து விட்டனர் என்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி உள்ளது.நம்பெருமாள் சிலையை மாற்றுவது முடியாது; முகம் மற்றும் சில இடங்களில் உள்ள பழுதுகளை நீக்குவதற்காக, சொர்ணபதனம் செய்யப்பட்டது. சொர்ணபதனம் செய்யும் போது, முறைதாரர்களான அர்ச்சகர்கள் அனுமதிக்கப்பட்டனர். குறைபாடுகளை சரி செய்வதற்காக, நானும் ஸ்தபதிகளுடன் இருந்தேன்.நம்பெருமாளை மாற்றினால், பழமையான அங்கி பொருந்தாது. நித்திய கைங்கர்யம் செய்து வரும் அர்ச்சகர்களை மீறி, உற்சவர் நம்பெருமாளை மாற்றுவது இயலாத காரியம். உற்சவரை மாற்றியதாகவும், பொன்னால் செய்யப்பட்டது என்றும் கூறியது தவறான வாதம்.கொட்டாரம் அருகில் இருந்த புருேஷாத்தம பெருமாள், 2001ல் நடந்த சம்ப்ரோக்ஷணத்தின் போது, பாதுகாப்பு கருதி, விமானம், கருவறை போன்ற லட்சணம் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த, 2015ல் நடந்த சம்ப்ரோக்ஷணத்தின் போது, ஆயிரங்கால் மண்டபத்தில், லட்சணத்தோடு கூடிய மண்டபத்தில், ஆதார பீடத்துடன் புருேஷாத்தம பெருமாளை எழுந்தருளச் செய்தனர்.கடந்த, 2015ல் நடந்த சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடந்த போது, பாலாலயம் செய்யப்படவில்லை. சம்ப்ரோக்ஷணத்துக்காக, மூலவருக்கு கல்கம் எனப்படும் தைலக்காப்பிலான அங்கியை அகற்றி, புது கல்கம் சேர்த்து புதிய கல்கம் செய்யப்பட்டது. இதை தான், மூலவர் மாற்றப்பட்டதாக புகார் கூறுகின்றனர்.ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மூலவருக்கு தைலக்காப்பு செய்யப்படும். அதன் காரணமாக, பெருமாள் திருமேனியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்பு நடந்த சம்ப்ரோக்ஷணத்தின் போ தும், பெருமாள் மாற்றப்பட்டதாக சர்ச்சைகள் வந்தன. இது போன்ற சர்ச்சைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.பெருமாளை மாற்றியதாகவும், சாலக்கிராமம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், புருேஷாத்தம பெருமாள் மாற்றப்பட்டதாகவும் கூறுவது தவறான வாதம். தவறான வாதங்கள் முன் வைக்கப்படுவதை, வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.