கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வந்தாச்சு பதவி உயர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2019 04:03
குடும்பத்தினர் மாறாத அன்பு கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
குரு, சனி, கேதுவின் ஆதரவால் நன்மை தொடரும். செவ்வாய் மார்ச் 20 வரை சாதகமாக இருந்து நற்பலன்களை தருவார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை; காரணம் சுக்கிரன் மார்ச் 22 முதல் சாதகமான இடத்திற்கு வருகிறார். தெய்வ அனுகூலத்தால் சுகமான வாழ்வு அமையும். செயலில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரிகள் உறுதுணையாக செயல்படுவர். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுக்கிரனால் மார்ச்21க்கு பிறகு பெண்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குறிப்பாக மார்ச் 28,29ல் உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். அதே நேரம் ஏப்.9,10ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்களுக்கு குருவால் பதவிஉயர்வு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை மார்ச் 20க்குள் கேட்டு பெறவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மார்ச் 25,26,27ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஏப்.8க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டாலும் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். வியாபார விஷயமாக வெளியூர் சென்றவர்கள் அதிக ஆதாயத்துடன் திரும்புவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். மார்ச் 17,18, ஏப்.13ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மார்ச்30,31 ஏப்.3,4,5ல் சந்திரனால் தடைகள் வரலாம். ராகுவால் வாடிக்கையாளர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகலாம் கவனம்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மார்ச் 21க்கு பிறகு மறையும். அதன் பிறகு பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். மார்ச் 20க்கு பிறகு எதிலும் விடாமுயற்சி தேவைப்படும். மார்ச் 15,16, ஏப்.11,12ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு குரு சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காண்பர். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவால் உயர்ந்தநிலையை அடைவர். இருப்பினும் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் அக்கறையும், விடாமுயற்சியும் தேவைப்படும். சக மாணவர்களிடம் விழிப்புடன் இருப்பது நல்லது.
விவசாயிகள் நல்ல வருமானத்தை காணலாம். கோதுமை, சோளம், தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். உங்கள் வளர்ச்சியின் பின்னணியில் பெண்களின் ஆதரவு இருக்கும்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். வேலைக்கு செல்லும் பெண்கள் மார்ச் 20க்கு பிறகு சிறப்பான பலன் பெறுவர். ஏப்.6,7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மார்ச்19,20ல் நல்ல பலனை காணலாம். சகோதரவழியில் பணஉதவி கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். சூரியனால் கண்தொடர்பான பிரச்னை வரலாம்.
மார்ச் 20க்கு பிறகு செவ்வாயால் சிரமத்திற்கு ஆளாகலாம். பயணத்தின் போது கவனம்.
* நல்ல நாள்: மார்ச் 17, 18, 19, 20, 25, 26, 27, 28, 29, ஏப்.1, 2, 6, 7, 8, 13 * கவன நாள்: மார்ச் 21, 22 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 3, 5 * நிறம்: மஞ்சள், சிவப்பு
பரிகாரம்: * தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் * புதன் கிழமையன்று குலதெய்வ வழிபாடு * வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »