பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
11:07
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை விழாவிற்கு, 80, ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார்.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, வரும், 24- - 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு, தமிழகம் உட்பட பல இடங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிப்பர். அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருவதால், குற்றச் சம்பவங்கள் மற்றும் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசிப்பதற்கு, கோவில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆடிக்கிருத்திகை விழா, ஐந்து நாட்கள் நடப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், கடந்த ஆண்டை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோவில், தேவஸ்தான விடுதிகள் மற்றும் திருக்குளம் ஆகிய பகுதிகளில், கடந்தாண்டு, 60 ’சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.நடப்பாண்டில், கூடுதலாக, 20 கேமரா என, மொத்தம், 80 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இதை கண்காணிக்க, மலைக்கோவிலில் மட்டும், எட்டு ’எல்.இ.டி., டிவி’ வைக்கப்படும். பக்தர்கள் நெரிசல் இல்லாமல், மூலவரை தரிசிக்க, ’க்யூ’ வரிசை அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.