பதிவு செய்த நாள்
29
நவ
2019
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் நேற்று துவங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 1ல், கொடியேற்றமும், 10 அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இதைக்காண, பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். விழாவை காண வரும் பக்தர்கள், பாதுகாப்புடன் வந்து செல்லவும், விழா இனிதே நடக்க வேண்டியும், நகர காவல் தெய்வமான துர்க்கைஅம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, துர்க்கையம்மனுக்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், 7:00 மணிக்கு அலங்கார மண்டபத்தில், துர்க்கையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், காமதேனு வாகனத்தில், வண்ண மலர்களால் துர்க்கையம்மன் அலங்கரிக்கப்பட்டு, அதிர்வேட்டுகள் முழங்க, மேளதாளத்துடன், மாட வீதி உலா வந்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.