சித்திரைத்திருவிழாவின் முதல்நாள் காலை 9.36க்கு கொடியேற்றப்படுகிறது. இரவில் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் பவனிவருகின்றனர். இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலைப் புரிகிறார். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தைக் குறிப்பதாகும். ஒரு மரத்திற்கு வேர் ஆதாரமாகவும், இலைகள், நரம்புகள், கிளைகள் பரவியும் உள்ளன. அதுபோல, உலகத்திற்கு இறைவன் ஆதாரமாக இருக்க, 84 லட்சம் வகை உயிர்கள் எங்கும் பரவியிருப்பதாக இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. மனித மனத்தில் கோபம், அகங்காரம், பேராசை, தற்பெருமை உள்ளிட்ட எத்தனையோ அசுர குணங்கள் உள்ளன. இவற்றை அடக்கி நல்வழியில் மனதைத் திருப்பினால் மனிதவாழ்வு உயர்வு பெறும். நல்லவிஷயங்களில் மனம் ஈடுபட வேண்டுமானால் இறைவனின் திருவருள் வேண்டும். கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் குணம் கொண்டது. வேண்டும் வரத்தை கொடுப்பதற்காக சுவாமி கற்பக விருட்சத்தில் பவனி வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால், தான் என்ற ஆணவம் வந்துவிடும். அதைப் போக்குவதற்காக மீனாட்சி சிம்ம வாகனத்தின் மீதேறி. கவனமாய் இரு என்று நம்மை நல்வழிப்படுத்துகிறாள்.