சித்திரைத்திருவிழாவின் ஐந்தாம் நாளில் சுந்தரேஸ்வர், மீனாட்சியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐந்து முக்கிய உறுப்புகளின் மூலம் வாழ்க்கை இயங்குகிறது. ஐந்தாம்நாளில் இறைவனை தரிசிப்பவர்கள் இந்த ஐம்புலன்களையும் நல்வழியில் செலுத்தி உயர்வாழ்வு பெறுவர். ஒருவருடைய மனம் தர்மத்தின் வழியில் சிந்திக்க வேண்டும். தர்மசிந்தனையோடு இருப்பவன், நல்வழியில் பொருள் தேடி செல்வந்தனாக உயர்வான். ஒழுக்கமாக வாழ்ந்து இன்பங்களைப் பெற்று பிறவியின் முடிவில் இறைவனின் திருவடிகளை அடைய வேண்டும். இதுவே மனிதப் பிறவியின் பயன். அறம்,பொருள், இன்பம், வீடுபேறு என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும். அறப்படி பொருள்சேர்த்து இன்பமாய் வாழ்பவன் இறைவன் திருவடியை அடைவான் என்பது இதன் பொருள். திறமை படைத்த வீரன் செலுத்தும் குதிரை குறிக்கோளைச் சென்றடைவது போல, நம் மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செலுத்துபவன் இறைவன் என்பதையும் இந்த வாகனம் உணர்த்துகிறது. அரிமர்த்தனபாண்டியன் அவையில் அமைச்சராய் இருந்த மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் செல்லும்போது, சிவபெருமானே குருவாக வந்து அருள்புரிந்தார். சுந்தரேஸ்வரர் குதிரைவீரனாக வந்து நரியைப் பரியாக்கியும், பரியை நரியாக்கியும் திருவிளையாடல் புரிந்தார். நம் உள்ளங்களை வேட்டையாட வரும் இந்த தம்பதியரை வழிபட்டு வாழ்வில் நலம் பெறுவோம்.