பதிவு செய்த நாள்
27
டிச
2019
10:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்விற்காக இன்று பகல் பத்து உற்சவம் துவங்கியது. உற்சவத்தின் முதல் நாள் நம்பெருமாள் நீள் முடி கீரிடம், வைர அபயஹஸ்தம் , கர்ண பூசனம் , பவளமாலை, காசு மாலை, நெல்லிக்காய் மாலை , சூரிய பதக்கம், அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அர்ஜுனா மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, நேற்று இரவு, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பூலோக வைகுண்டம் என்றும், திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பகல் பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என, 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, நேற்று இரவு, 7:00 மணிக்கு, கோவில் மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சாந்தனு மண்டபத்தில், அரையர்கள் சேவையுடன், நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான, இன்று காலை, 7:00 மணிக்கு, உற்சவத்தின் முதல் நாள் நம்பெருமாள் நீள் முடி கீரிடம், வைர அபயஹஸ்தம் , கர்ண பூசனம் , பவளமாலை, காசு மாலை, நெல்லிக்காய் மாலை , சூரிய பதக்கம், அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அர்ஜுனா மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாள், பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான, ஜன., 5ம் தேதி, மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். மறுநாள், 6ம் தேதி அதிகாலை, பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.அன்று முதல், ராப்பத்து உற்சவம் துவங்கும். ராப்பத்து உற்சவ நாட்களில், திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியைதவிர, மற்ற, ஒன்பது நாட்கள், சொர்க்க வாசல் திறந்திருக்கும்.ஜன., 16ம் தேதி, நம்மாழ்வார் மோட்சத்துடன், வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவக்க நாள் முதல், நிறைவு பெறும்வரை, மூலவர் நம்பெருமாள், ரத்தின அங்கியுடன் சேவை சாதிப்பார். வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.