பதிவு செய்த நாள்
27
டிச
2019
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று சூரிய கிரகண தீர்த்தவாரி நடந்தது.
சூரிய கிரகணம், நேற்று காலை, 8:08 மணிக்கு தொடங்கி, 11:15 மணிக்கு முடிந்தது. கிரகணம் தொடங்கும் நேரத்தில், கோவில் வளாகத்தில் உள்ள, பிரம்ம குளக்கரையில், சூல ரூப அருணாசலேஸ்வரர் எழுந்தருளினார். பின்னர், அவருக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, அரிசி மாவு, அபிஷேக பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர், தேன், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். பின், சிவாச்சாரியார்கள் சூலத்தை பிரம்ம தீர்த்தக்குளத்தில் மூன்று முறை மூழ்கி, தீர்த்தவாரி நடத்தினர். அருணாசலேஸ்வரர் கோவிலில், சூரிய கிரகணம் தொடங்கும் நேரத்திலும், சந்திர கிரகணம் முடியும் நேரத்திலும், தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி, சூரிய கிரகணம் தொடங்கும் நேரத்தில் நேற்று, தீர்த்தவாரி நடந்தது. அந்த நேரத்தில், 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் குளக்கரையில் தியானத்தில் ஈடுபட்டனர். வழக்கம்போல், கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. ஆனால், பக்தர்கள் குறைவாகவே காணப்பட்டனர். இதனால், அந்த நேரத்தில் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.