பதிவு செய்த நாள்
28
டிச
2019
11:12
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் துவங்கியது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு, அரங்கநாதப் பெருமாள் சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று காலை, பகல் பத்து உற்சவம் எனும், திருமொழி திருநாள் துவங்கியது. காலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறந்து, பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்பு உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உள்ளே வலம் வந்து ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். இவர் முன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் ஆகியோர் பெருமாள் எழுந்தருளினர். பின், கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாச பட்டர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், சிறிய திருமடல் உள்ளிட்ட, 4,000 ஆயிரம் திவ்ய பிரபந்தங்களை சேவித்தனர். பின்பு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.