பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
சிவகங்கை : சிவகங்கை விஸ்வநாத சுவாமி கோயிலில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை, ஆராட்டு விழா நடந்தது.
ஐயப்ப பக்தர்கள் சபை சார்பில் மண்டல பூஜை விழா, டிச.,27 அன்று முதற்கால சங்காபிஷேக பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஐயப்பனுக்கு 2 ம் கால சங்காபிஷேகம், நெய் அபிஷே கம், சிறப்பு பூஜை, வாழை தண்டில் தயாரித்த அலங்கார பந்தலில் ஐயப்பன் எழுந்தருளினார். நேற்று 27ம் தேதி இரவு சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா வந்தார். அதை தொடர்ந்து ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கேரள செண்டை மேள கச்சேரியும் நடைபெற்றது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் ஏற்பாட்டை செய்திருந்தனர். திருப்புத்துார்: திருப்புத்துார் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக பூஜை நடந்தது.இக்கோயிலில் மகரஜோதி யாத்திரையை முன்னிட்டு டிச.,17 ல் மண்டலாபிஷேக விழா துவங்கியது. தினசரி காலை லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது.
நேற்று டிச., 27ம் தேதி காலை மூலவர் சன்னதி முன் கணபதி ஹோமம் துவங்கி அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பஜனை பாட பூஜை நடந்தது.இரவில் பக்தர்கள் பஜனை பாடல்களுடன் சுவாமி வீதி வலம் வந்தார். ஏற்பாட்டினை பக்தர்கள், ஐயப்ப சேவா சங்கம், மகரஜோதி யாத்திரைக் குழு, ஆலயத்தினர் செய்தனர்.
தேவகோட்டை: தேவகோட்டை தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு மாலையில் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து பால்குடம், பொன்னுாஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் காலை ஐயப்பனுக்கு ஏகதின லட்சார்ச்சனை செய்தனர். திருஆபரண பெட்டி எடுத்து வந்து மஞ்சள் மாதா பவனி வந்தது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர். நிறைவு நாளான நேற்று டிச., 27ம் தேதி காலை ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடந்தது.பக்தர்களின் கூட்டு வழிபாட்டினை தொடர்ந்துஇரவு 11:00 மணிக்கு நடை சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.