பதிவு செய்த நாள்
10
ஜன
2020
12:01
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், விடிய, விடிய ஆருத்ரா அபிஷேகமும், இன்று அதிகாலை கோபுர தரிசனமும் நடைபெற்றது. லட்சக்கணக்காண பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இந்த கோவிலில், நேற்று (9ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு உகந்த விருட்சமான, ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால் ஆருத்ரா அபிஷேகம் விடிய, விடிய நடைபெற்றது. தொடர்ந்து, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன், கோவில் வளாகத்தில் வீதியுலா வந்து, கோவில் கோபுரம் முன் வந்து, அருள்பாலித்தார். கோபுர தரிசனம் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகம் ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் வந்திருந்து மூலவரை வழிபட்டும், நடராஜ பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் பார்த்தும் தரிசனம் செய்தனர்.