பதிவு செய்த நாள்
14
ஜன
2020
10:01
வாரணாசி : காசி விஸ்வநாதர் கோவிலில், லிங்கத்தை தொட்டு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, உடை கட்டுப்பாடு விதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு, பக்தர்கள் நேரடியாக பால் அபிஷேகம் செய்து, தொட்டு வணங்குவது வழக்கம். இனி, இத்தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, உ.பி., சுற்றுலா மற்றும் தர்மகாரிய துறை அமைச்சர் டாக்டர் நீல்கந்த் திவாரி தலைமையில், கோவில் நிர்வாகம் மற்றும் காசி விஸ்வத் பரிஷத் அமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
அதில், பேன்ட், ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வரும் பக்தர்கள், ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்க தடை விதிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள், சற்று தொலைவில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.வேட்டி, குர்தா அணிந்தோர் மட்டுமே, ஜோதிர்லிங்கத்தை தொட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். விரைவில், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.