பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
சென்னை :சிவராத்திரியை முன்னிட்டு, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆதியோகி ரத யாத்திரை, தமிழகம் முழுவதும் பயணித்து வருகிறது.உலகில் தோன்றிய, முதல் யோகியான சிவன், அகத்தியர் உள்ளிட்ட சப்தரிஷிகளுக்கு, யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்த ரிஷிகள் ஒவ்வொருவரும், அதை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். இது, ஆன்மிகத்திற்கான அடித்தளமாக அமைந்தது.இதையடுத்து, ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், 112 அடி ஆதியோகியின் சிலை, சத்குருவால், 2017ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும், கோவையில் செயல்படும் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும், ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு, கோவையில் இருந்து ரதயாத்திரை துவங்கியது. இதற்காக, ஏழு அடி உயரமுள்ள ஆதியோகி சிலையுடன் கூடிய, நான்கு ரதங்கள், தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணித்து வருகின்றன.ஒவ்வொரு ரதமும், பிப்ரவரி, 20-ம் தேதி வரை, 2,500 கி.மீ., என்ற கணக்கில், 10 ஆயிரம் கி.மீ., பயணிக்க உள்ளன. பின், இந்த ரதங்கள், மஹா சிவராத்திரி நாளன்று, கோவை திரும்புகின்றன.