பதிவு செய்த நாள்
18
ஜன
2020
11:01
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த எர்ரணஹள்ளியில் உள்ள, சக்தி பொப்பிடி சின்னக்கா அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரணஹள்ளியில் உள்ள சக்தி பொப்பிடி சின்னக்கா கோவில் திருவிழா, ஆண்டுதோறும், தை பொங்கலை முன்னிட்டு கொண்டாடப்படுவது வழக்கம். அதே போன்று இந்தாண்டும் இவ்விழா கடந்த, 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று, எர்ரணஹள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய் உட்பட, பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், சக்தி பொப்பிடி சின்னக்கா அம்மனுக்கு, மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக ஆடு மற்றும் சேவல்களை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.